லஞ்சம் வாங்கியது நான்தான்… ஆனால்… திமுக கவுன்சிலரால் தலைகுனிந்த பெண் தலைவர் : நகர் மன்ற கூட்டத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 December 2022, 1:59 pm
DMK councilor Bribery - Updatenews360
Quick Share

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு கவுன்சிலர் சத்யசீலன். தன் வார்டுக்குட்பட்ட பகுதியில் வீடு கட்டுவதற்கான தடையில்லா சான்று மற்றும் அனுமதி பெற இவர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. பொதுவாக இப்படிப்பட்ட வீடியோக்கள் வெளியானால், இது நான் இல்லை என்றோ, அது லஞ்சப்பணம் இல்லை என்றோ மறுப்பு தான் வெளியாகும்.

ஆனால், சத்யசீலனோ, தான் சத்திய சீலன் என்பதை நிரூபிக்கும் விதமாக, லஞ்சப்பணம் வாங்கியது உண்மை தான் என்றும், லஞ்சப்பணத்தை நகர்மன்றத்தலைவர் பரிமலா வாங்கச் சொன்னதாலேயே தான் அதை வாங்கியதாகவும் நகர்மன்றக்கூட்டத்திலேயே தெரிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

அதுமட்டுமல்ல.. தான் அந்த பணத்தை வாங்கிக்கொடுத்தததற்காக எனக்கு 5000 ரூபாய் கமிஷன் தந்ததாகவும் சொல்லி தெரிக்கவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகர்மன்ற தரப்பிலும் குரல்கள் எழுந்ததால், அவையில் காரசார விவாதம் பற்றிக்கொண்டது. இந்த விவகாரத்தில் விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை உறுப்பினர்கள் சிலர் முன்வைக்க, ஒரே கட்சியை சேர்ந்தவர்களே இப்படி நடந்துகொள்ளலாமா என்ற பேச்சுக்கும் இது காரணமாகிவிட்டது.

லஞ்சம் வாங்கியது உண்மையா, வாங்கச்சொன்னது உண்மையா என்பதெல்லாம் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்றாலும், வடிவேலு நகைச்சுவையே உண்மையானது போல, இப்படியொரு விசித்திர குற்றச்சாட்டு கூடலூர் நகர்மன்றம் இதுவரை பார்த்திருக்காது என்பதே உண்மை.

Views: - 389

0

0