திமுக-காரங்க கொடுமைப்படுத்துறாங்க… முதலமைச்சர் ஸ்டாலின் இங்க வரனும்… வெற்றிலை, பாக்குடன் இளைஞர் தர்ணா..!!

Author: Babu Lakshmanan
6 June 2022, 7:18 pm
Quick Share

திருச்சி : வீடு கட்டுவதற்கு கட்டிட அனுமதி வழங்க வேண்டி வெற்றிலை பாக்கு பழங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அமர்ந்து நூதன முறையில் இளைஞர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த அளுந்தலைப்பூர் கிராமத்தின் வடக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்த்ராஜ். இவருக்கு சொந்தமான இடத்தில் பேஸ்மண்ட் போட்டு கட்டிடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் எழுப்பி உள்ளார்.

இந்நிலையில் கட்டிடம் கட்டுவதற்கு அப்ரூவல் வேண்டி புள்ளம்பாடி கிராம நிர்வாகத்தை நாடியுள்ளார். இந்நிலையில் பலமுறை அலைந்தும் அனுமதி வழங்க முடியாது என்று ஊராட்சி நிர்வாகம் கூறியுள்ளது, இதனால் வீடு கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது தாய் சரசுவதியுடன் வந்த அரவிந்த்ராஜ் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தனது பிரச்சனையை தீர்க்க தமிழக முதல்வர் உடனடியாக நேரில் வரவேண்டும் என வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது, கந்து வட்டி கொடுக்கும் திமுக பிரமுகர் ஒருவர் பிரச்சனை செய்வதாகவும், புறம்போக்கு இடத்தில் இருந்து தங்களின் டீக்கடையை இடித்து தள்ளி விட்டதாகவும் அந்த நபர் குற்றம்சாட்டினார். மேலும், தங்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி, அதில் டீக்கடை வைத்து நடத்த, கட்டிட அனுமதி வழங்கக்கோரினால், அதற்கு அனுமதி வழங்க மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, ஆப்பிள், ஆரஞ்ச் வெற்றிலை பாக்கில் 51 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை வைத்து தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுப்பதாக கூறி, முதலமைச்சர் நேரில் வரவேண்டும் என்று தெரிவித்து ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படாததால் அவரை கைது செய்தனர்.

Views: - 625

0

0