தண்ணீரே இல்லாத இடத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட திமுக அமைச்சர்கள் : செடிகளை காப்பாற்ற 100 அடி கிணற்றில் இறங்கும் பெண்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
12 May 2023, 4:38 pm
DMK - Updatenews360
Quick Share

விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியத்திற்குட்பட்ட இடத்தில் கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி ஆய்வு செய்ய வந்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் கொசப்பாளையம் கிராமத்தில் தனிநபர் ஒருவர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தார்.

ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 25 ஏக்கரில் 15 ஏக்கர் நிலத்தில் 5 ஆயிரம் மரக் கன்றுகளை அமைச்சர்கள் பெரியசாமி பொன்முடி, மஸ்தான் ஆகியோர் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

இதில் தேக்கு, பலா, மாமரம் ஆகிய மரங்கள் நடவு செய்யப்பட்டது. இதற்கு தண்ணீர் வசதி ஏதும் இல்லாமலேயே அவசர அவசரமாக மரங்களை நட்டு விட்டு சென்று விட்டனர்.

இதையடுத்து, ஊராட்சியில் இருந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மரக்கன்றுகளை காப்பாற்ற ஏற்பாடு செய்தனர்.

மரக்கன்றுகளை காப்பாற்றுவது என்பது வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், அதற்காக தண்ணீர் எடுக்க செல்லும் இடம் தான் ஆபத்தானதாக அமைந்து இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது.

ஏனெனில் சுமார் 100 அடி ஆழம் உள்ள கிணற்றுக்குள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை சேர்ந்த பெண்கள் குடத்துடன் இறங்கி தண்ணீர் எடுத்து வருவதுதான் அனைவரது மனதையும் உலுக்குவதாக உள்ளது.

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், கிணற்றுக்குள் இருக்கும் படிக்கட்டில் பெண்கள் வரிசையாக நின்று கொண்டு, தண்ணீர் குடத்தை ஒருவருக்கொருவர் மாற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார்கள்.

ஒரு குடம் தண்ணீரை கரைக்கு கொண்டு வருவதற்கு சுமார் 10 பெண்கள் தங்களது உயிரை பணயம் வைக்கிறார்கள் என்பது தான் வேதனையின் உச்சம்.

கோடையில் மரக்கன்றுகளை காக்க வேண்டும் என்ற முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், இத்தகைய விபரீதம் தான் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக பார்க்கப்படுகிறது.

அரசு திட்டங்களை அறிவித்து கோடி கணக்கில் ஒதுக்கீடு செய்து துவக்குவதோடு சரி அதனால் யாரும் பயனடையாத மாதிரி தான் அரசின் திட்டங்களை வகுக்கப்படுகிறது என்று தோன்றுகிறது.

உடனடியாக அரசு ஐந்து ஆயிரம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் கிணறு அமைத்து சொட்டு நீர் பாசனம் மூலம் மரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஆபத்தான முறையில் பெண்கள் கிணற்றுக்குள் இறங்கி செடிகளை காப்பாற்ற ஆர்வமுடன் வேலை செய்தாலும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டால் அரசு பொறுப்பேற்றுக் கொள்ளுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Views: - 314

0

0