நீட் தேர்வு குறித்து திமுக பொய் பிரச்சாரம்.. ஊழலை நிறுத்தினாலே மின்கட்டணத்தை உயர்த்த தேவையில்லை : கிருஷ்ணசாமி பரபர குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
12 September 2022, 9:44 pm
Quick Share

நீட் தேர்வு குறித்து திமுக பொய் பிரச்சாரம் செய்வதாகவும், தற்போது முதல்வர் சர்வாதிகார போக்குடன் பேசி வருவதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :- இம்மானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மதுரையிலிருந்து பரமக்குடி சென்ற போது பல்வேறு இடங்களில் காவல்துறை தடுத்து நிறுத்தியது. பல மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவானது. பரமக்குடிக்கு செல்ல விடாமல் காவல்துறை வாகனங்கள் குறுக்கே நிறுத்தப்பட்டு, எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் வேறு அமைப்புக்கு அஞ்சலி செலுத்த காவல்துறை அனுமதி வழங்கி ஒரே சமூகத்திற்கு உள்ளாக மோதலை உருவாக்க காவல்துறை நினைக்கிறது.

இம்மானுவேல் சேகரன் நினைவிட பொறுப்பை மாற்ற வேண்டும். புதிய தமிழகம் கட்சியிடம் நினைவிட பொறுப்பை வழங்க வேண்டும். இம்மானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி செலுத்த கூடாது என இருட்டடிப்பு செய்ய இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

திமுக தேர்தல் நேரத்தில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்தனர் ஒரு வாக்குறுதியையும் திமுக செயல்படுத்தவில்லை. அனைத்து தேர்தல் வாக்குறுதிக்கும் நேர்மாறாக திமுகவின் நடவடிக்கைகள் உள்ளது. மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். தமிழக அரசு மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும். மின்சார வாரியத்தில் உள்ள ஊழலை சரி செய்தாலே மின் கட்டண உயர்வு தேவையில்லை. செப்டம்பர் 20 ல் மின் கட்டண உயர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

நீட் தேர்வு தோல்வியின் சரிவுக்கு திமுக தான் பொறுப்பு. திமுகவின் தவறான பிரச்சாரத்தால் நீட்டை மாணவர்கள் எதிர்க் கொள்ள முடியவில்லை. இன்றைய சூழலில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத சூழல் உள்ளது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அரசியலுக்காக நீட் விவகாரத்தில் திமுக தவறாக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக பொய் பிரச்சாரம் செய்கிறது. தற்போது முதல்வர் சர்வாதிகார போக்குடன் பேசி வருகிறார். மக்களின் குரல்களை முதல்வர் செவி சாய்த்து கேட்பதில்லை, என்றார்.

Views: - 379

0

0