பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் கொடூரமாக வெட்டிக்கொலை : 3 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

Author: Babu Lakshmanan
25 March 2022, 10:17 am
Quick Share

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் டிரைவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி செந்திலாம்பண்ணையை சேர்ந்தவர் நெல்லையப்பன். இவருடைய மகன் முத்துப்பாண்டி(45). இவர் தற்போது புதுக்கோட்டை அய்யனார் காலனியில் வசித்து வந்தார். இவர் மீது கஞ்சா விற்பனை செய்தது உள்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நேற்று மாலையில் தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை அருகே நின்று கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு மர்ம ஆசாமிகள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளனர். அவர்கள் திடீரென மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக முத்தப்பாண்டியை வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், நகர துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.மோப்ப நாய் பியா வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் முத்துப்பாண்டி கஞ்சா விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி, அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 1088

0

0