குடிபோதையில் மனைவி குறித்து தவறாக பேசியதால் தகராறு.. உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்ட நபர்… 2 பேர் கைது

Author: Babu Lakshmanan
2 June 2022, 9:45 am
Quick Share

சென்னை : மனைவியை பற்றி தவறாக பேசியதை கண்டித்த நபரை, அவரது உறவினர்களே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாதவரம் பால்பண்ணை 4வது யூனிட் பகுதியை சேர்ந்தவர் மோகன் (34). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மோகனும் அவருடைய உறவினர்களான‌ அதே பகுதியை சேர்ந்த பிரபு (38) மற்றும் திருவெற்றியூர் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜெபா(எ) ஜெயக்குமார் (34) மற்றும் அவரது நண்பர்களுடன் மோகன் வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.

இந்நிலையில் பிரபுவும், ஜெபக்குமாரும் மது போதையில் மோகனின் பிரிந்து சென்ற மனைவியை பற்றி அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால், வாய்த் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி மோகனை கழுத்து, முகம் , மார்பு பகுதியில் பலமாக தாக்கியதில் நிலை குலைந்து இரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்ததும், அனைவரும் அங்கிருந்து ஒன்றும் தெரியாதது போல் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

பின்னர், மணலி சின்ன மாத்தூர் சின்னசாமி நகரில் வசிக்கும் மோகனின் சகோதரர் செந்தில் என்பவருக்கு இந்த செய்தி தெரிய வந்ததால். உடனே சகோதரரை பார்க்க வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்துள்ளார். அப்போது அவர் உயிரற்ற நிலையில் காணப்பட்டதால் அதிர்ச்சியடைந்து உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

தகவல் அறிந்த மணலி காவல் உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி மாதவரம் பால்பண்ணை காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர்.

சம்பவத்திற்கு காரணமான பிரபு, ஜெயக்குமார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Views: - 628

0

0