அழுகிய நிலையில் கிடந்த மாமியார் – மருமகன் சடலம் ; 7 நாட்கள் பிணங்களுடன் வசித்த தாய், மகன்.. விசாரணையில் கண்கலங்கிய போலீசார்..!!

Author: Babu Lakshmanan
13 February 2023, 9:44 am
Quick Share

ஈரோடு : கோபி அருகே அழுகிய நிலையில் கிடந்த மாமியார் – மருமகன் உடல்களுடன் 7 நாட்கள் பிணத்துடன் தாய், மகன் வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் குமணன் வீதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம்(74) – சாந்தி(61) தம்பதியினர். இவர்களுக்கு சசிரேகா (35) என்ற மகளும், சரவணக்குமார் (33) என்ற மகனும் உள்ளனர். இதில் மகள் சசிரேகா திருமணம் முடிந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருக்கும் கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

மகன் சரவணக்குமார் உடல் நலம் சரியில்லாதவர் என்பதால், தாய், தந்தையின் பராமரிப்பில் வசித்து வந்துள்ளார். மேலும், சாந்தியின் தாயார் கனகாம்பாளும் அவர்களுடனேயே வசித்து வந்துள்ளார். மோகனசுந்தரம் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து ஓய்வு பெற்றவர் என்பதால் வறுமையின் பிடியில் தவித்து வந்தனர்.

அதுமட்டுமின்றி வயது முதுமை காரணமாக மோகனசுந்தரம் மற்றும் அவரது மாமியார் கனகாம்பாள் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒருகட்டத்தில் அதனையும் கைவிட்டு விட்டனர். வருமானம் இல்லாததால் மோகனசுந்தரம், சாந்தி ஆகியோர் கோவில் மற்றும் வெளி இடங்களுக்கு சென்று இலவசமாக கிடைக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு வந்து உள்ளனர்.

வயது முதுமையால் உடல் நலம் பாதிப்பு, வறுமை ஆகியவற்றால் அவர்கள் உண்ண உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்த சூழலில், மோகனசுந்தரமும், கனகாம்பாளும் இறந்துவிட்டனர். இதனை வெளியே சொல்லாமல், இறந்த உடல்களுடன் சாந்தி தனது மகனுடன் வீட்டிலேயே இருந்து உள்ளார்.

இந்த நிலையில், வீட்டில் துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அதிர்ச்சியடைந்தனர்.

அழுகிய நிலையில் மோகனசுந்தரம் மற்றும் கனகாம்பாளின் உடல் கிடந்ததையும், அதன் அருகில் சாந்தியும், அவருடைய மகன் சரவணக்குமாரும் இருந்ததையும் கண்டனர். உடனே இறந்தவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், வறுமை, உடல் நலம் பாதிப்பு, சரியான நேரத்தில் உணவு கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களால் 7 நாட்களுக்கு முன்பு மோகனசுந்தரமும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனகாம்பாளும் இறந்து விட்டதாகவும், உடல்களை புதைக்க தன்னிடம் பணம் இல்லாதால், சடலங்களை அப்படியே வைத்திருந்ததாகவும் கூறுகின்றனர்.

மேலும், பக்கத்து வீட்டில் உள்ள யாரிடமும் கூறி உதவி கேட்க மனம் இல்லை என்று கூறியதும் போலீசாரே கண்கலங்கி போகினர்.

Views: - 397

0

0