மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வம்..! பாஜகவில் இருந்து விலகியதற்கு இதுதான் காரணமா?

Author: kavin kumar
12 February 2022, 10:45 pm
Quick Share

சென்னை : இரண்டு ஆண்டுகளுக்கு பின் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அவரது முன்னிலையில் கு.க.செல்வம் மீண்டும் திமுகவில் இணைந்தார்.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் கு.க. செல்வம். கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவராகவும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களில் முக்கியமானவராகவும் அவர் இருந்து வந்தார்.இந்நிலையில், திமுக மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகிய அவர் பாஜகவில் இணைந்தார். சுமார் இரண்டு ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து பணியாற்றி வந்த கு.க. செல்வம், இன்று மாலை தற்போது மீண்டும் திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் மீண்டும் திமுகவில் இணைந்தார்.

மேலும், அவருக்கு விரைவில் கட்சியில் முக்கிய பதவி கொடுக்கப்பட உள்ளதாகவும் அண்ணா அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவிலிருந்து விலகி மீண்டும் தாய் கழகமான திமுகவில் இணைவதால் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார். மேலும் நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி அளிக்காதது, பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. திமுக எனும் குடும்பத்துக்குள் அண்ணன், தம்பிகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதால் அந்த குடும்பத்தில் இருந்து வெளியே சென்றதாகவும், தற்போது மீண்டும் அதே குடும்பத்திற்கு திரும்பி விட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவில் தனக்கு உரிய முக்கியத்துவம் வழங்கியதாகவும், ஆனால் கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற பாஜகவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் பிடிக்காத காரணத்தால் தற்போது மீண்டும் திமுகவில் இணைந்ததாக தெரிவித்தார். ஆயிரம் விளக்கு, தியாகராய நகர் தொகுதியில் பணியாற்றி திமுகவை தேர்தலில் வெற்றிபெற செய்வேன். தனக்கு வயதாகி விட்டதால் இனி கட்சி மாறி செல்வது தமக்கு பிடிக்கவில்லை. எனவே தாய் வீடான திமுகவில் இருந்து விலக மாட்டேன். பாஜகவின் எதிர்காலம் தமிழ்நாட்டில் இருண்டு இருப்பதாகவும், அடுத்த முறையையும் திமுகவே ஆட்சியில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Views: - 859

0

0