இந்தி திரையுலகம் வேண்டவே வேண்டாம்.. தன் மொழி சினிமாவை தூக்கிப்பிடிக்கும் பிரபல நடிகர்..!

Author: Rajesh
10 May 2022, 7:44 pm
Quick Share

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. ரசிகர்கள் இவர் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு என்று அழைக்கின்றனர். தெலுங்கில் இவர் நடிப்பில் உருவான ஸ்பைடர் என்ற திரைப்படம் தமிழில் வெளியாக ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சர்காரு வாரி பாட்டா’ திரைப்படம் நாளை மறுதினம் வியாழன் அன்று வெளியாகவுள்ளது. நாட்டில் நடைபெற்ற வங்கி மோசடிகளை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படம் வெளியாவதையொட்டி, மகேஷ் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-இந்தியில் நடிக்குமாறு பல தயாரிப்பாளர்கள் என்னை அணுகினார்கள். நான் அதை ஏற்கவில்லை. இந்தி சினிமாவில் நடித்து என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனக்கு தெலுங்கு சினிமாவிலேயே நட்சத்திர அந்தஸ்து, புகழ், ரசிகர்கள் அன்பு கிடைத்துள்ளது.

எனவே, இன்னொரு மொழி படத்தில் பணியாற்றுவது குறித்து நான் யோசிக்க மாட்டேன். தெலுங்கில் இன்னும் பெரியதாக என்ன படங்களை பண்ணுவது என்பதில்தான் எனது முழு கவனமும் இருக்கும்.நான் தெலுங்கில்தான் நடிப்பேன். அந்தப் படத்தை ஒட்டுமொத்த இந்தியாவுமே பார்க்க வேண்டும் என விரும்புவேன். அது இப்போது நடப்பதை பார்த்து மகிழ்ச்சி கொள்கிறேன். தெலுங்கு படங்களில் நடிப்பதைத்தான் என்னுடைய பலமாக கருதுகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 468

0

0