கோவையில் காலாவதியான சிக்கனால் சிக்கிய பிரபல ஷவர்மா கடைகள் : அதிரடி ரெய்டில் சிக்கிய கெட்டுப்போன கிரேவி, பிரியாணி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2022, 9:44 pm
Shwaramaa Shop - Updatenews360
Quick Share

கோவை : சிக்கன் ‘ஷவர்மா’ விற்பனை செய்த கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.

கேரளா மாநிலத்தில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் கோழி இறைச்சியை கொண்டு தயார் செய்யப்படும் சிக்கன் ‘ஷவர்மா’ சாப்பிட்ட கேரள சிறுமி உயிரிழந்தார்.

மேலும் பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், ஷவர்மா தயாரிப்பதற்கு கெட்டுப்போன கோழிக்கறி பயன்படுத்தியது தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக கேரளா மாநிலம் முழுவதும் சிக்கன் உணவு தயாரிப்பு உணவகங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எட்டு குழுவாக பிரிந்து, மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோவை வ.உ.சி. பூங்காவை ஒட்டிய கடைகளில் மாலை வேளைகளில், சிக்கன் ஷவர்மா விற்பனை நடைபெறும் கடைகளில் நேற்று மாலை, உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

‘டென்மார்க்’ மற்றும் ‘தி மெஜஸ்டிக்’ ஆகிய இரு கடைகளில் நடந்த ஆய்வில், கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அதே போல கெட்டுப்போன கிரேவி, கெட்டுப்போன பிரியாணியில் இருந்து சேகரிக்கப்பட்ட கறித்துண்டுகள், காய்ந்து போன இடியாப்பம் ஆகியவையும், பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

இந்த கடைகளில் இருந்து சிக்கன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Views: - 714

0

0