2 EMI தான் கட்டல… டிராக்டரை பறிமுதல் செய்த வங்கி.. சாலையில் படுத்து தனியொரு ஆளாக போராடிய விவசாயி!!
Author: Babu Lakshmanan12 August 2021, 11:05 am
கொரோனாவால் தவணை கட்ட முடியாத விவசாயியின் டிராக்டரை வங்கி ஊழியர்கள் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொன்னாப்பூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுரேஷ்குமார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு கோட்டாக் மஹிந்திரா வங்கியில் 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். மூன்று மாதத்திற்கு ஒரு தவணை என 52,000 கட்ட வேண்டும். மொத்தம் 12 மாத தவணையில் 8 மாதம் கட்டியுள்ளார். கொரனோ காரணமாக கடந்த இரண்டு தவணைகளில் அவரால் கட்ட முடியவில்லை. இதனால் வங்கிக்கு சென்று தவணை கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று விவசாயி சுரேஷ்குமார் வீட்டில் இல்லாத போது, அங்கு வந்து வங்கி ஊழியர்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளனர். தகவலறிந்து சுரேஷ்குமார் டிராக்டரை துரத்திச் சென்று சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மடக்கிப்பிடித்து டிராக்டர் முன்பு படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அதிகாரிகளுடன் அவர் இரண்டு மாத தவணை மட்டும்தான் கட்ட வேண்டும் என்றும், அதற்காக ஏன் டிராக்டர் பறிமுதல் செய்ய வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளாரி. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊர் மக்கள் திரண்டதால் டிராக்டரை விட்டுவிட்டு அதிகாரிகள் சென்று விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஒரத்தநாடு காவல் நிலையத்தில் சுரேஷ் குமார் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வங்கியில் சென்று கேட்டபோது, கடன் வழங்குவது மட்டும் தான் எங்கள் வேலை என்றும், கடனை திருப்பி வாங்குவதற்கு திருச்சியை சேர்ந்த அதிகாரிகள்தான் ஈடுபடுவதாகவும், அதனால் இதற்கும் வங்கிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார். இதே வங்கி ஊழியர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, டிராக்டருக்கு தவணை கட்டாத பாலன் என்ற விவசாயை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளுக்கு, கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்டுள்ள இன்னல்களை புரிந்து கொள்ளாமல், இதுபோன்ற மனிதாபிமானம் இல்லாமல் செயல்படும் வங்கிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசு முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
0
0