தலைமைச் செயலகத்தில் சரிந்து விழுந்த ராட்சத மரம்: தலைமைப் பெண் காவலர் உயிரிழந்த சோகம்..!!
Author: Aarthi Sivakumar2 November 2021, 10:28 am
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் அரசு அலுவலக பணிகள் நடந்து வருகின்றன. கொரோனா பாதிப்புகளால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்கள் பணிக்கு சென்று வந்தனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
விடிய விடிய பெய்த தொடர் கனமழையால் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அமைந்துள்ள பகுதி அருகே பெரிய மரம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்துள்ளது. இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
போக்குவரத்து காவலர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்களும் சேதமடைந்தன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
0
0