நைசாக எஸ்கேப் ஆன கைதி…பணியில் இருந்த 2 பெண் காவலர்கள் சஸ்பெண்ட்: திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடி..!!
Author: Aarthi Sivakumar3 April 2022, 11:28 am
திருவாரூர்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதியை தப்பிக்க விட்ட இரு பெண் காவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாருர் மாவட்டம் பேரளம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சாராயம் விற்றதாக கஸ்தூரி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருவாரூர் பெண்கள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு வயிற்றுவலி உள்ளதாக கஸ்தூரி கூறியுள்ளார்.
இதையடுத்து பேரளம் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பெண் காவலர்கள் பாதுகாப்பில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த கஸ்தூரி அங்கிருந்து தப்பிச் சென்றார். தப்பிச் சென்ற கஸ்தூரியை பேரளம் காவல் துறையினர் வலைவீசி தேடினார்கள்.
இந்நிலையில் நேற்று குத்தாலத்தில் தன் மகள் வீட்டில் பதுங்கியிருந்த கஸ்தூரியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கஸ்தூரிக்கு பாதுகாப்பாகச் சென்று அஜாக்கிரதையாக பணியாற்றி கஸ்தூரியை தப்பிக்கவிட்ட சத்யா மற்றும் கோமதி ஆகிய இரு பெண் காவலர்களையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
0
0