தீயணைப்பு துறை தியாகிகள் தினம் அனுசரிப்பு: எழும்பூரில் உள்ள ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து மரியாதை..!!

Author: Rajesh
14 April 2022, 1:34 pm
Quick Share

சென்னை: சென்னை எழும்பூரில் தீயணைப்பு துறை தியாகிகள் தினம் அனுசரிப்பு நிகழ்ச்சியில் டிஜிபி உள்ளிட்டோர் ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தீயணைப்பு துறை தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் உள்ள ஸ்தூபியில் உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். 1944ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதால் தீயணைப்பு வீரர்கள் 66 பேர் வீரமரணம் அடைந்தனர்.
அவர்கள் நினைவாக ஆண்டுதோறும் இந்திய அரசால் ஏப்ரல் 14ம் தேதி தீயணைப்பு துறை தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று சென்னை எழும்பூரில் உள்ள தீயணைப்பு துறை தலைமை அலுவலகத்தில் உள்ள ஸ்தூபியில், அந்த துறையின் டிஜிபி பி.கே.ரவி, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, காவலர்வீட்டு வசதி கழக டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் உட்பட காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை உயர்அதிகாரிகள் பலரும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு தீயணைப்பு துறை தொடங்கப்பட்ட 1955ம் ஆண்டிலிருந்து 2020ம் ஆண்டு வரை 33 பேர் மீட்டுப்பணியின் போது, வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 694

0

0