முருகனுக்கு அரோகரா… தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தொடங்கியது கொடியேற்றம் : பழனியில் பக்தர்கள் பரவசம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2023, 1:14 pm
Pakani Kodiyetram - Updatenews360
Quick Share

பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தேரோட்டம் வருகிற பிப்ரவரி 4ம்தேதி நடைபெறவுள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை‌ 9.30மணியளவில் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6ம்நாள் திருவிழாவான பிப்ரவரி 3ம்தேதி மாலை நடைபெறுகிறது.

தொடர்ந்து அன்று இரவு நான்கு ரதவீதிகளில் வெள்ளித்தேரோட்டமும், பிப்ரவரி 4ம் தேதி முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டமும் நடைபெறுகிறது. இன்றுமுதல் தினமும் அருள்மிகு முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், இணைஆணையர் நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வருகிற பிப்ரவரி 7ம்தேதி இரவு தெப்பத்தேரும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியுடன் தைப்பூசத் திருவிழா நிறைவடைய உள்ளது. தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக பழனி திருக்கோவில் நிர்வாகம் மற்றும் பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Views: - 309

0

0