கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்தல்… பாமகவினர் அதிரடி கைது : கடலூரில் 7 ஆயிரம் போலீசார் குவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2023, 2:33 pm
Cuddalore - Updatenews360
Quick Share

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மூலம் அனல் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கம்மாபுரம் அருகே உள்ள வளையமாதேவி, கரிவேட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமங்களில், கடந்த 2006 ஆம் ஆண்டு நிலங்கள் ஒப்பந்தம் போடப்பட்ட நிலப்பரப்புகளை கையகப்படுத்துவதற்காக என்.எல்.சி நிறுவனம் தற்போது சமப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.கவினர் மற்றும் விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். அதையடுத்து உடனடியாக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் என்.எல்.சிக்காக கட்டாயப்படுத்தி, மிரட்டி நிலம் கையகப்படுத்தும் பணியை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி இன்று கடலூர் மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என பா.ம.க அறிவித்தது.
ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமலிருக்க தகுந்த காவல்துறை பாதுகாப்புடன் பேருந்துகள் இயங்கும், கடைகள் திறக்கப்படும் என கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய நகரங்களில் மருந்தகங்கள், தேநீர் கடைகள் தவிர்த்து 75% கடைகள் மூடப்பட்டுள்ளன.

அதேசமயம் காவல்துறையினர் பாதுகாப்புடன் 100% அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் 50% மட்டுமே இயக்கப்படுகின்றன.

கடலூரில் இருந்து புதுச்சேரிக்கும், புதுச்சேரியில் இருந்து கடலூருக்கும் செல்லும் தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக 7,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்திய பாமகவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Views: - 262

0

0