திமுக அரசு மீது மக்களுக்கு கோபம்.. நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் : முன்னாள் அமைச்சர் தங்கமணி

Author: Babu Lakshmanan
26 July 2022, 5:58 pm
Quick Share

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும், மக்கள் திமுக அரசு மீது கோபத்தில் உள்ளார்கள் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மின்விலை உயர்வு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவரணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேல், நாகநாதர் பாண்டி உட்பட 500க்கும் மேற்பட்ட அதிமுக கலந்து கொண்டு மின்சாரம் உட்பட பல்வேறு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, “இலவச வேட்டி சேலை திட்டம் முன்னாள் முதல்வர் அம்மாவால் கொண்டு வந்ததன் நோக்கமே கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்குதான். ஆனால், தற்போது அதனை நிறுத்த உள்ளதாக தெரிய வருகிறது. அதற்கு பதிலாக பிரிண்டிங் சேலை தரவுள்ளதாக கூறப்படுகிறது. இலவச வேட்டி சேலை திட்டத்தை நிறுத்தக்கூடாது,” எனக் கூறினார்.

மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் கோப்புகள் பத்திரங்கள் மற்றும் பணம் காணாமல் போனதாக சிவி சண்முகம் கொடுத்த புகார் குறித்த கேள்விக்கு ?,”பணம் காணாமல் போய் இருப்பதால்தான் காணாமல் போய் உள்ளது என்று புகார் தெரிவித்துள்ளோம். என்னென்ன பொருட்கள் காணாமல் போய் உள்ளதோ, அதைப் பற்றி தானே புகார் கொடுக்க முடியும்,” எனக் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மற்றும் இன்று விசாரணை குறித்த கேள்விக்கு, “எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் வாயிலாக எதிர்கொள்ளும்,” என்றார். மேலும், 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும், மக்கள் அந்த அளவுக்கு இந்த அரசு மீது கோபத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, மத்திய அரசு ஓபிஎஸ்க்கு ஆதரவாக உள்ளதாக எழுப்பி கேள்விக்கு, “நீங்கள் தான் சொல்கிறீர்கள் கட்சி வேறு. கொள்கை வேறு. அதிமுக தலைமைக்கு தலைவர் உள்ளார்,” எனக் கூறினார்.

மின்சாரத்துறை கடன் சுமையால் தவிப்பது குறித்த கேள்விக்கு, “அதிமுக புதிய மின் திட்டங்களை 60ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொண்டு வந்துள்ளது. கடன் சுமையால் இருப்பது என குறிப்பிடுவது தவறு இது சேவை துறையாகும்,” என தெரிவித்தார்.

Views: - 587

0

0