முன்னாள் எம்.பி.வசந்தகுமாரின் பிறந்தநாள் : அகஸ்தீஸ்வரத்தில் எம்.பி விஜய் வசந்த் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் அஞ்சலி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2022, 7:57 pm
MP Vasanth Bday - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கன்யாகுமரி பாராளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர்கள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்பி வசந்தகுமார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமானார். அவர் காலமானதிற்கு பிறகு அவர் பிறந்த நாளான சித்திரை மாதம் 1-ம் தேதி ஒவ்வொரு வருடமும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் விழாவாகக் கொண்டாடி அவருடைய நினைவிடத்தில் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்துவருவது வழக்கம்.

அதனடிப்படையில் இந்த வருடம் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அகஸ்தீஸ்வரத்தில் அமைந்துள்ள வசந்தகுமார் நினைவிடத்தில் உள்ள மணிமண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை முதலே அப்பகுதிக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஊர் பொதுமக்களும் கூடத் தொடங்கினர். பின்னர் பகல் 12 மணி அளவில் வசந்தகுமார் எம்.பி யின் மகனும் தற்போதைய கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியின் எம்.பியுமான விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வசந்தகுமார் நினைவிடத்திற்கு வந்தனர்.

பின்னர் அங்கு நிறுவப்பட்டிருந்த வசந்தகுமார் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து வசந்தகுமார் நினைவிடத்திற்கு வசந்தகுமாரின் மனைவி தமிழ்செல்வி, மகன்கள் விஜய் வசந்த் எம்.பி., வினோத் குமார் மகள் தங்கமலர் ஜெகநாத் மற்றும் குடும்பத்தினர்கள் சென்று மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்களும் அப்பகுதி மக்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குமரி வசந்தகுமார் அதெலடிக் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி முதல் வசந்தகுமார் நினைவிட மணி மண்டபம் வரை பள்ளி மாணவ மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டது.

பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வசந்தகுமார் எம்.பி.யின் மணி மண்டபம் அருகில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்த சமபந்தி விருந்தை விஜய்வசந்த் எம்.பி. துவக்கி வைத்தார். இந்த சமபந்தி விருந்தில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பிறந்தநாள் விழாவில் மாவட்ட காங்கிரஸ் சேவாதள பிரிவு தலைவர் ஜோசப் தயாசிங், வடக்கு வட்டார தலைவர் கால பெருமாள், தெற்கு வட்டார தலைவர் முருகேசன், அகஸ்தீஸ்வரம் நகரத் தலைவர் கிங்ஸ்லி, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி, அகஸ்தீஸ்வரம் பேரூர் திமுக செயலாளர் பாபு உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 863

0

0