திருட்டு திராவிட மாடல் அரசை நம்ப முடியாது.. அதுக்கு தருமபுரம் ஆதீனம் தான் பொருத்தமாக இருப்பார் ; எச்.ராஜா பரபரப்பு பேச்சு!

Author: Babu Lakshmanan
24 April 2023, 9:53 am
Quick Share

சீர்காழி சட்டநாதர் கோவிலில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகள் சீர்காழியிலேயே வைத்து பராமரிக்க வேண்டும் என்று, திருட்டு திராவிட மாடல் அரசை நம்பி இதனை ஒப்படைக்க மக்கள் தயாராக இல்லை என எச். ராஜா தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலில் கடந்த 16ஆம் தேதி கும்பாபிஷேக பணிகளுக்கு யாகசாலை அமைக்க குழி தோண்டிய போது மண்ணில் புதைந்திருந்த 22 ஐம்பொன் சிலைகள், 462 தேவார செப்பேடுகள் மற்றும் பூஜை பொருட்கள் மீட்கப்பட்டது. இவை அனைத்தும் இரண்டடுக்கு போலீசார் பாதுகாப்புடன் கோவில் சன்னதியில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் செப்பேடுகளை பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, சிலைகள் மீட்கப்பட்ட நந்தவனப் பகுதியை பார்வையிட்ட அவர், சிலைகளின் தன்மை குறித்து கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா கூறியதாவது :- சீர்காழி நகர் முழுவதுமே சிலைகளை கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை பார்த்தேன். இது ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கோயில் வளாகத்திற்கு உள்ளேயே சிலைகள் மீட்கப்பட்டுள்ளதால், அந்த சிலைகளை இங்குள்ள கோவில் வளாகத்திலேயே அருங்காட்சியகம் அமைத்து பராமரிக்க வேண்டும். அதற்கான பாதுகாப்பு வசதிகளை இங்கேயே ஏற்படுத்த வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிலை பாதுகாப்பகத்தில் வைக்கப்படும் சிலைகளே அவ்வப்பொழுது மாறிவிடுவதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் பழமை வாய்ந்த சிலைகளை பாதுகாக்க திராவிட திருட்டு மாடல் அரசனை நம்புவதற்கு இப்பகுதி மக்கள் தயாராக இல்லை. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பல கோடி ரூபாய்கள் நிதி முறைகேடு நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 421.9 கோடி ரூபாய் வரை களவாடப் பட்டிருக்கிறது. இதுபோல் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ள சூழலில் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கண்டெடுக்கப்பட்ட விக்கிரகங்கள் அனைத்தும் இங்கேயே வைத்து பராமரிக்கப்பட வேண்டும்.

அரசின் பாதுகாப்பில் உள்ள சிலைகளை பாதுகாப்பதில் 300 சிலைகள் போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாக ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். எனவே இங்குள்ள சிலைகள் அனைத்தும் ஆதினத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இங்கேயே பராமரிக்கப்பட வேண்டும்.

கர்நாடக தேர்தலை பொருத்தவரைக்கும் அதிமுகவின் கூட்டணி என்பது தமிழகத்தில் தொடர்கிறது. மற்ற மாநிலங்களை பொறுத்தவரை அவர்கள் தனியாக வேட்பாளர்களை நிறுத்தி வருகின்றனர். அதேபோல்தான் தற்போதைய தேர்தலிலும் அவர்கள் தனியாக வேட்பாளர்களை நியமித்துள்ளனர். இதில் எந்த பிரச்சனையும் இல்லை தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளது, எனவும் தெரிவித்தார்.

Views: - 243

0

0