பெங்களூரூ சிறையில் உள்ள ஹரி நாடார் மீண்டும் கைது.. காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை மாநகர காவல்துறை திட்டம்..!!

Author: Babu Lakshmanan
31 March 2023, 8:18 pm
Quick Share

பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை மோசடி வழக்கில் நெல்லை மாநகர போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி நாடார் சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவர் கழுத்து, கை, விரல் என உடல் முழுவதும் எடைக் கணக்கில் நகை அணிந்து பிரபலமானார். குறிப்பாக சுமார் 4 கிலோ அளவுக்கு நகை அணிந்து நடமாடும் நகைக்கடையாக வலம் வந்தார். மேலும் ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப்படை கட்சியில் ஒருங்கிணைப்பாளராக இருந்து அரசியலிலும் கால் பதித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் போட்டியிட்டு 30,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வாங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில், தேர்தல் முடிந்த கையோடு பெங்களூர் குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்கு ஒன்றில் ஹரி நாடாரை கைது செய்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து ஹரிநாடார் மீது அவரது மனைவி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தன்னை மிரட்டுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கிடையில் பனங்காட்டுப்படை கட்சியில் இருந்து ஹரி நாடாரை நீக்கம் செய்து ராக்கெட் ராஜா கடந்தாண்டு அறிவிப்பு வெளியிட்டார். அதன் பிறகு ஹரி நாடார் காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பிய கடிதத்தில் ராக்கெட் ராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.தொடர்ந்து அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் ஹரிநாடாருக்கு ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீசார் ஹரி நாடார் மீது ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த ஜமாலுதின் என்பவர் கொடுத்த மோசடி புகாரில், அவரை நெல்லை குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் ஆவுடையப்பன் பரப்பன அக்ரஹார சிறையில் வைத்து கைது செய்தார். இதற்கான ஆவணங்கள் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து விசாரணை தேவைப்படும் பட்டதில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்ற அனுமதியோடு ஹரிநாடாரை காவலில் எடுக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே தேர்தலுக்குப் பிறகு பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து ஹரி நாடார் சிறையில் இருக்கும் நிலையில், தற்போது நெல்லை மாநகர போலீசார் மேலும் ஒரு வழக்கில் அவரை கைது செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Views: - 243

0

0