மோசமான நிலைக்கு செல்லும் தமிழகம் … இதுதான் ஆரம்பம் ; எச்சரிக்கும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம்!!

Author: Babu Lakshmanan
7 April 2023, 9:01 am
Quick Share

கோவை : கல்லூரி மாணவிகளும் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் வேதனை தெரிவித்துள்ளார்.

போதையில்லா தமிழகம் அமைக்க உறுதியேற்போம் என்ற போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை இந்து முன்னணி அமைப்பினர் தற்போது துவங்கியுள்ளனர். அதன் முதல் விழிப்புணர்வு பேரணி கோவையில் நடைபெற்றது.

இந்து இளைஞர் முன்னணி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் கலந்து கொண்டார். கோவை சிட்கோ பகுதியில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியானது சங்கம் வீதி வரை நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணி மேற்கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வர சுப்ரமணியம், மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேரணி நடைபெற்றது என்றார். தமிழகம் முழுவதும் இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்து முன்னணி சார்பில் முயற்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

போதை பொருள் பல்வேறு வடிவங்களில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து கொண்டிருக்கிறது என கூறிய அவர், குறிப்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருக்கிறது என நாங்கள் செய்தியாளர்கள் மத்தியிலும் உளவுத்துறையிலும் தெரிவித்து வருகிறோம் என்றார்.

தற்போது கல்லூரிகளில் மாணவிகளும் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளார்கள் என தெரிவித்த அவர், பெண்கள் இன்றைக்கெல்லாம் மது கடைகளுக்கு நேரடியாக சென்று மது அருந்தக் கூடிய அளவிற்கு இந்த நாடு சென்று கொண்டிருக்கிறது என தெரிவித்தார். இந்த அரசாங்கம் டாஸ்மாக் கடையை ஒழிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

போதை பொருள் எங்கு விற்பனையாகிறது, அதன் ஏஜென்டுகளாக யார் இருக்கிறார்கள்..? என காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரியும். எனவே, இது குறித்து காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு கல்லூரி மாணவர்களையும், பெண்களையும் காப்பாற்ற வேண்டும். இல்லையெனில் வருகின்ற காலங்களில் தமிழ்நாடு மிக மோசமான நிலைக்குச் செல்லும் என தெரிவித்தார்.

மேலும், இது குறித்து தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த யோசனை மேற்கொண்டுள்ள நிலையில், முதல் கட்டமாக கோவையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

Views: - 260

0

0