அரசு பேருந்தில் ஓட்டை.. ஓட்டுநரை வசை பாடிய பயணிகள் : ஆட்சியர் அலுவலகத்தில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநரால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2022, 7:24 pm
Bus Repair - Updatenews360
Quick Share

திண்டுக்கல்லில் அரசு பேருந்து முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் பயணிகள் திட்டுவதாக கூறி பேருந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்திய ஓட்டுனரால் பரபரப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயமு 50) .இவர் கடந்த 15 வருடங்களாக அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் சட்ட உரிமை கழக தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். இன்று 14.12.22 அதிகாலை குமுளியிலிருந்து திண்டுக்கலுக்கு அரசு பேருந்தை ஓட்டி வந்தார்.


பேருந்தில் பயணிகள் இருக்கைகள், ஜன்னல் கண்ணாடி கதவுகள், ஓட்டுநர் இருக்கை, வண்டியில் உள்ளே உள்ள நடைபாதை பிளாட்பாரம், மேற்கூரை, வண்டி ஸ்டேரிங், ஆக்சிலேட்டர், போன்றவை பழுதடைந்துள்ளதாகவும் மழை பெய்தால் மேற்கூறையில் வழியாக தண்ணீர் ஒழுகுவதாகவும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் திட்டுவதாகவும், அரசு பேருந்து முற்றிலும் பராமரிப்பின்றி உள்ளதாகவும் மிகவும் சிரமப்பட்டு வண்டியை திண்டுக்கல் பேருந்து நிலையம் வரை ஒட்டி வந்து பயணிகளை இறக்கி விட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில் டிரைவர் முருகேசனுக்கு உடல் உபாதைகள் இருப்பதாக லோயர் கேம்ப் பணிமனை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டு தொடர் பணி சுமையை குறைக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் பணிமனை அதிகாரிகள் அதனைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து 22 மணி நேரம் பணி சுமை வழங்கி வருகின்றனர். இது குறித்து பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் மன உளைச்சல் அடைந்த முருகேசன் திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஓட்டுவதற்கு தகுதி இல்லாதா பேருந்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் காட்டுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஓட்டி வந்தார்.

அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இல்லாத காரணத்தினால் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளரிடம் பேருந்து நிலைமை குறித்த புகார் மனுவை வழங்கினார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

Views: - 421

0

0