ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த தவளை.. 3 குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு.. பெற்றோர் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
6 February 2023, 4:30 pm
Quick Share

மதுரை தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று கோவில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில் உயிரிழந்த தவளை இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை TVS நகர் அருகே கோவலன் நகர் பகுதியில் அமைந்துள்ள மணிமேகலை தெரு பகுதியைச் சேர்ந்த சேதுபதி – மீனாட்சி தம்பதியினரின் மகன்கள் அன்பு செல்வம், தமிழரசன் இருவருக்கும் திருமணம் நடைபெற்று மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அன்புச் செல்வம், ஜனனிஸ்ரீ என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு நித்ரா ஸ்ரீ(8), ராட்சன ஸ்ரீ(7) ஆகிய 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர். அதேபோல், தமிழரசனுக்கும், ரஞ்சிதா என்பவருக்கும் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு தாரணி ஸ்ரீ(3) வயதில் ஒரு மகள் உள்ளார்.

நேற்று கூட்டு குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் தைப்பூச தினத்தை முன்னிட்டு நேற்று காலை சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர். காலை கோவில் அருகே இருந்த ஒரு சிற்றுண்டி கடையில் ஐஸ்கிரீம் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். அதில், குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் உயிரிழந்த நிலையில் தவளை ஒன்று கிடந்தது.

இதைக் கண்ட குழந்தை நித்ரா ஸ்ரீ, தந்தை அன்பு செல்வத்திடம் கூறவே, உடனடியாக குழந்தையை அருகில் இருந்த திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.

உடனடியாக 3 குழந்தைகளும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, அவர்களுக்கு அங்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

சிற்றுண்டி கடையில் தவளை உயிரிழந்த நிலையில் கிடந்த ஐஸ்கிரீமை உண்ட 3 குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Views: - 335

0

0