உடன் பணிபுரியும் பெண்ணுடன் கணவனுக்கு கள்ளக்காதல் : தட்டிக்கேட்ட மனைவிக்கு நேர்ந்த கதி… நாகர்கோவிலில் அதிர்ச்சி!!

Author: Babu Lakshmanan
8 February 2023, 12:09 pm
Quick Share

கன்னியாகுமரி : கள்ளக்காதல் தொடர்பாக கணவனிடம் தட்டிக்கேட்ட மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஞ்சுகிராமம் அடுத்த அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (45). இவருக்கு மேரிசைலஜா (40) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கொத்தனார் வேலை செய்து வந்த ஜார்ஜுக்கும், அவருடன் வேலை செய்து வரும் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தெரிந்த மேரிசைலஜா அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து, அவர் கணவரை கண்டித்ததுடன், இந்த விவகாரம் தொடர்பாக அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இந்த நிலையில், இனி அந்தப் பெண்ணுடன் தொடர்பு வைக்கக் கூடாது என்று மேரிசைலஜா எச்சரிக்கை விடுத்ததால், ஆத்திரமடைந்த ஜார்ஜ், அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில், காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மேரிசைலஜாவின் தாயார் ராஜம் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ஜார்ஜ் மீது பெண் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேரி சைலஜா நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேரி சைலஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 802

0

0