உண்மையை உரக்க கூறியதால் கிடைத்த பரிசு : திமுக பிரமுகரின் மகள் மீது புகார் கொடுத்த சுயேட்சை வேட்பாளர் கம்யூ., கட்சியில் இருந்து நீக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2022, 4:31 pm
Party Remove Independent - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் திமுக வேட்பாளர் தர்மத்திற்கு செலவு செய்வதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை குனியமுத்தூர் கிளையில் உறுப்பினராக உள்ளவர் பா.விஜயகுமார் மற்றும் அவரது மனைவி வி.நிரஞ்சனாதேவி. 97 வது வார்டில் தேர்தல் பணி செய்து வந்த இவருக்கு பதிலாக திமுக நிர்வாகியான மருதமலை சேனாதிபதியின் மகளுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே அந்த வார்டில் நிரஞ்சனா தேவி சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்த சூழலில் நிரஞ்சனா தேவி நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து நிவேதிதா வரம்பு மீறி செலவு செய்வதாகவும், பொதுமக்களுக்கு பண விநியோகம் செய்வதாகவும் புகார் அளித்தார்.

இந்த நிலையில் அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகம் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, குனியமுத்தூரை சேர்ந்த கட்சி உறுப்பினர் தோழர் வி.நிரஞ்சனாதேவி  வார்டு எண் 97ல் கட்சியின்  கட்டுப்பாடுகளை  மீறி போட்டியிடுகிறார்.

அவருக்கு துணையாக அவரது கணவர் பா. விஜயகுமார் செயல்பட்டு வருகிறார். கட்சியின் கட்சி கட்டுப்பாடுகளை மீறியுள்ள  விஜியகுமார்  மற்றும்  நிரஞ்சனாதேவி ஆகிய  இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார்கள்.  அவர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இனி மேற்கொண்டு எவ்வித சம்மந்தமும் இல்லை. கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 701

0

0