கொடுங்கோல் ஆட்சி செய்த ஆஷ்துரையை தூக்கிப்பிடிப்பதா? போராட்ட தியாகிகளை அவமதிக்கிறதா தமிழக அரசு? வெகுண்டெழுந்த பாஜக..!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2022, 6:32 pm
Ashe Durai - Updatenews360
Quick Share

நாடு 75வது சுதந்திர தினவிழாவை கொண்டாட தயாராகி கொண்டு இருக்கும் இச்சமயம் தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட தியாகிகளை அவமதிக்கும் செயல் நடைபெருவதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புக்கணைகள் உருவாகியுள்ளது.

ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது, திருநெல்வேலி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த ஜில்லா கலெக்டராகவும், நீதிபதியாகவும் இருந்தவர் ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் என்ற ஆஷ்துரை. இவர், கொடுங்கொல் ஆட்சியாளராக கருதப்பட்டவர். சுதந்திரத்திற்காக போராடிய வஉசிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர்.

வஉசி சிறையில் அடைக்கப்ப்டடதால் அன்றைய இளைஞராக இருந்த வாஞ்சிநாதன் ஆவேசமடைந்து 1911ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு கொடைக்கானல் செல்வதற்காக குடும்பத்தோடு சென்ற ஆஷ்துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

பின்னர், தன்னை ஆங்கிலேய போலீஸ் சுற்றி வளைந்ததும் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்திற்கு பிறகு அப்போது பலர் சுதந்திர போராட்டத்தில் தீவிரம் காட்டியதாக வரலாறு சொல்லப்படுகிறது.

இந்திய நாட்டுக்காக உயர்நீத்த வாஞ்சிநாதனுக்கு இன்னும் மணியாச்சி ரயில் நிலையத்தில் நினைவு சின்னம் கூட அமைக்கப்படவில்லை. அதனை யாரும் கண்டு கொள்வோரும் இல்லை. பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என்ற பெயர் சூட்டப்பட்டது.

ஆனால் நினைவு மண்டபம் பெயரளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது அதில் அவருக்கு சிலை கூட வைக்கப்படவில்லை. இது இன்னும் பலருக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் ஜில்லா கலெக்டராக இருந்த ஆங்கிலேயர் ஆஷ் துரைக்கு தூத்துக்குடி பீச் ரோட்டில் பழையதுறைமுகம் எதிர்புறம் அப்போதய ஆங்கில அரசால் 1911ம் ஆண்டு நினைவு மண்டபம் கட்டப்பட்டது.

ஆனால் வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய ஆஷ் துரைக்கு தூத்துக்குடியில் ஏற்கனவே நிறுவப்பட்ட நினைவு மண்டபத்தை புதுப்பிக்கும் பணிக்கு மக்கள் வரி பணத்தை செலவு செய்வதா என எதிர்ப்பு கணைகளை வீச தொடங்கியுள்ளனர்.

16 ஸ்தூபிகள் 8 தூண்களுடன் எண் கோன அமைப்பில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டது. நாளடைவில் புல்புதர் சூழ்ந்த மண்டபமாக காட்சியளித்தது. இடைப்பட்ட காலத்தில் தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வஉசி கல்வி கழகத்தினர் இந்த இடத்தை பராமரித்து வந்தாக கூறப்படுகிறது.

தற்போது ஆஷ்துரை நினைவிடத்தை தூத்துக்குடி மாநகராட்சி பல லட்சம் செலவு செய்து புதுப்பித்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கணைகள் உருவாகியுள்ளது. சிலர் சமூக வலைதளங்களில் இதுகுறித்து கேள்வி எழுப்பி பதிவிட்டும் வருகின்றனர்.

நம் நாட்டிற்காக போராடிய வாஞ்சிநாதனுக்கு இன்னும் மணிமண்டபம், நினைவு சின்னம் இல்லை. ஆனால் ஆஷ் துரைக்கு இவ்வளவு செலவு தேவையா என சர்ச்சை வாதங்களும் நடந்து வருகிறது.

இதுகுறித்து, தகவல் தொழிநுட்ப பிரிவு செயலாளர் தங்கமாரியப்பன், செய்தியாளர்களிடம் கூறுகையில், வஉசி, வாஞ்சிநாதன் தேச பணியை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த ஆஷ் துரை மணி மண்டபத்தை புதுப்பிக்கும் பணி நடைபெறுகிறது.

தூத்துக்குடி சுதந்திர போராட்ட 4 தியாகிகளை சுட்டு கொன்றவர் இந்த ஆஷ் துரை ஆவார். இவரின் கொடுங்காளான இந்த செயலை இவரின் வரலாற்றை ஆவணங்களை இந்த மணி மண்டபத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு வரலாறு தெரியும் வண்ணம் வாஞ்சி நாதன், வஉசி, சுப்பிரமணிய சிவா போன்ற தலைவர்களின் வரலாற்றினை இந்த ஆஷ் துரை மணி மண்டபத்தில் பதிவு செய்ய வேண்டும் என கூறினார்.

பின்னர், பாஜக மாநில தொழிற்பிரிவு செயலாளர் கொம்பன் K.பாஸ்கர் தூத்துக்குடியில் கண்டன போஸ்டர்களை ஒட்டியுள்ளார். அதில், வஉசியின் 150வது ஆண்டு விழாவை கொண்டாடி வரும் இவ்வேளையில் நாட்டுக்காக பாடுபட்டு தன் சொத்துக்களை எல்லாம் இழந்து சிறையில் செக்கிழுத்த செம்மல் வுஉசி சிதம்பரம் பிள்ளைக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கிய கொடுங்கோலன் ஆஷ் துரைக்கு தூத்துக்குடியில் மணி மண்டபமா? ஐயா வவுசி, வாஞ்சிநாதன் அவர்களை அவமதித்தால் நாட்டுக்காக நாங்களும் போராடுவோம் என ஆங்காங்கே போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும், மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பாஜகவினர் திரண்டு வந்து மனுவும் அளித்தனர். இதுகுறித்து அவர்களிடம் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஶ்ரீ பேசியபோது, நகரில் தொன்மையான கட்டிடத்தை பழுது பார்த்து புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தான் ஆஷ் துரை நினைவிடத்தை பராமரிக்கிறோம் என்றார்.

75வது சுதந்திர திருநாளை கொண்டாட நாடே தயாராகி வருகிறது. அந்த வகையில் சுதந்திர போராட்டத்தோடு தொடர்புடைய ரயில் ரயில்நிலையங்களில் 5 நாட்கள் விழா நடந்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதில் மதுரை கோட்டத்தில் உள்ள வாஞ்சி மணியாச்சி ரயில்நிலையத்திலும் 5 நாட்கள் விழா நடக்க இருக்கிறது. இந்நன்னாளில் சுதந்திரத்திற்காக தன்னுயிரை விட்ட வாஞ்சிநாதனுக்கு நினைவு மண்டபம், நினைவு சின்னம் மணியாச்சியில் நிறுவப்பட வேண்டும் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Views: - 475

0

0