அரசு கல்லூரி மாணவர்களிடையே மோதல்… சமரசம் பேச சென்ற ஐடிஐ மாணவர் படுகொலை ; கரூரை உலுக்கிய சம்பவம்!!

Author: Babu Lakshmanan
19 April 2023, 6:42 pm
Quick Share

கரூர் ; குளித்தலையில் அரசு கலை கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டதில் தனியார் ஐடிஐ மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள திம்மம்பட்டி பஞ்சாயத்து, கணக்கப்பிள்ளையூர், வைரப் பெருமாள் பட்டியை சேர்ந்த மோகன்தாஸ் மகன் விக்னேஷ் (வயது 16). இவரது தந்தை இறந்து விட்ட நிலையில், தாய் குலுமாயி அரவணைப்பில் 10ம் வகுப்பு முடித்துவிட்டு, வைகைநல்லூர் பஞ்சாயத்து வை.புதூரில் உள்ள தனியார் ஐடிஐயில் 2ம் ஆண்டு ஐடிஐ எலக்ட்ரிகல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அதேபோல, விக்னேஷின் பெரியப்பா மனோகர் மகன் குருபிரகாஷ் (வயது 19) என்பவர் அய்யர்மலை கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் 2 ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று மதியம் சுமார் 1 மணி அளவில் குரு பிரகாஷை சக கல்லூரி மாணவர்கள் அய்யர்மலை கடைவீதியில் தாக்க இருப்பதாக வந்த தகவலை அடுத்து, விக்னேஷும் அய்யர்மலை கடைவீதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, குரு பிரகாஷ் தாக்கப்பட்ட போது, அவரது தந்தை மனோகர் மற்றும் விக்னேஷ் ஆகியோர் தடுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஐடிஐ மாணவர் விக்னேஷ் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனின்றி விக்னேஷ் நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் உயிரிழந்தார்.

காயமடைந்த குருபிரகாஷ் மற்றும் அவரது தந்தை மனோகர் ஆகியோர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து இறந்த விக்னேஷின் தாய் குலுமாயி குளித்தலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Views: - 311

0

0