திமுக வன்முறைக்கே பிறந்த கட்சி : ‘கோவில்களை காப்போம் கோவையை காப்போம்’ ஆர்ப்பாட்டத்தில் காடேஸ்வரா சுப்பிரமணிம் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 April 2022, 7:34 pm
Kadeswara Subramaniam - Updatenews360
Quick Share

கோவை : கோவில்களை காப்போம், கோவையை காப்போம் என்ற தலைப்பில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் விகேகே மேனன் சாலையில் “கோவில்களை காப்போம் கோவையை காப்போம்” என்ற தலைப்பில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இந்துக்கோயில்கள் அதிகளவு அகற்றப்பட்டு வருவதாகவும், கோவையில் பல்வேறு இடங்களில் மத கலவரங்களை தூண்டும் வகையில் பல்வேறு அமைப்புகள் செயல்படுவதாகவும், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவதாகவும் எனவே கோவையை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாக இந்து முன்னணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார் மாநில அமைப்பாளர் பக்தன் உட்பட கோவை மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோவில்களை காப்போம் காப்போம் என்ற முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் “ஜாதி ரீதியாக இந்துக்களை பிளவுபடுத்தும் சக்திகளை வேரெடுப்போம், பிஎஃப் மற்றும் எஸ்டிபிஐ அமைப்புகளை தடைசெய், ஆன்மீக கோயில்களுக்கு முன்பு நாத்திக தலைவர்களின் சிலைகள் எதற்கு?” என்ற பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டமானது மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் கண்டன சிறப்புரையாற்றிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கோவை உக்கடம் போன்ற பகுதிகளில் உள்ள நகைக்கடை வியாபாரிகள் இஸ்லாமிய அமைப்புகளை கண்டு பயந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

தற்பொழுது இஸ்லாமிய அமைப்புகள் குரானை இந்துக்கள் மத்தியில் திணிப்பதாகவும் விமர்சித்தார். தற்பொழுது இந்து கோவில்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளதாக கூறி எடுத்து வருவதாக தெரிவித்த அவர் அதனை கண்டிக்கும் விதமாகவே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

திமுக வன்முறைக்கே பிறந்த கட்சி என விமர்சித்த அவர் தேச பக்தி உள்ளவர்களை இழிவுபடுத்துவது தான் இவர்களுக்கு வாடிக்கையான விஷயம் என தெரிவித்தார். அனைத்து கல்லூரிகளில் பின்னாலும் போதை பொருள் விற்பனை நடைபெற்று வருவதாகவும் இளைஞர்கள் அனைவரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் சிறந்த காவலர்களை நியமித்து கோவையும் கோவில்களையும் காக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். திமுக மற்றும் திராவிட கழகங்கள் இதே நிலைமை தொடர்ந்தால் இந்து முன்னணி தொடர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்து கடவுள்கள் வேடமணிந்து சிறுவர்களும் கலந்து கொண்டனர்.

Views: - 539

0

0