தாய் மற்றும் இரு குழந்தைகள் கொடூரக்கொலை ; குண்டர் தடுப்புச் சட்டத்தின்‌‌ கீழ் 3 பேருக்கு சிறையில் அடைப்பு!!

Author: Babu Lakshmanan
2 June 2023, 11:22 am
Quick Share

கள்ளக்குறிச்சியில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை கொடூரமாக ‌கொலை செய்த வழக்கில் குற்றவாளி ‌3 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்‌‌ கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி நரிமேடு பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவருக்கும், உளுந்தூர்பேட்டை வட்டம், செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விமாலா (எ) அஞ்சலை என்பவருக்கும், வீட்டுமனை மற்றும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அஞ்சலை என்பவர் சங்கராபுரம் வட்டம், பாசார் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் தமிழ்செல்வன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டம், கடலங்குடி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மகன் ராமு ஆகியோருடன் மேலும் 2 பேர் சேர்ந்து கூட்டுச் சதித் திட்டம் தீட்டி, வளர்மதி மற்றும் அவரது 11 வயது மகன், 10 மாத கைக் குழந்தையை கொலை செய்து தடயங்களை அழித்த வழக்கில் ஐந்து குற்றவாளிகளை‌ கள்ளக்குறிச்சி காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, குழந்தை உட்பட 3 நபர்களை கொலை செய்த இவர்கள் பொது அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாலும், இனி வரும் காலங்களில் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதாலும், இவர்கள் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, குற்றவாளிகளான விமாலா (எ) அஞ்சலை என்பவரை வேலூர் பெண்கள் தனிச் சிறையிலும், தமிழ்செல்வன் மற்றும் ராமுவை கடலூர் மத்திய சிறையிலும்‌ கள்ளக்குறிச்சி காவல் துறையினர் அடைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 325

0

0