குடிபோதையில் தகராறு… ராணுவ வீரரை கம்பியில் கட்டிவைத்து தாக்கிய இளைஞர்கள்… குமரியில் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
22 May 2023, 10:12 am
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் மதுபோதையில் சாலையில் சென்றவர்களிடம் வாய் தகராறு செய்த ராணுவ வீரரை மனிதாபமின்றி கம்பியில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் சந்திப்பில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வபோது மதுபிரியர்களின் அட்டகாசங்கள் ஆற்றூர் சந்திப்பில் அரங்கேறுவது வழக்கம்.

இந்நிலையில், திருவட்டாரை அடுத்த மாத்தார் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவருடைய மகன் ரெதீஷ்குமார். ராணுவ வீரரான இவர் ஆற்றூரில் இயங்கிவரும் மதுகடைக்கு சென்று மது அருந்திவிட்டு தள்ளாடியபடி ஆற்றூர் சந்திப்பில் சாலையில் சென்றவர்களிடம் வாய்தகராறு செய்துள்ளார்.

இதனையடுத்து, ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர் மதுபோதையிலிருந்த ராணுவ வீரர் ரதீஷ்குமாரை கீழே தள்ளிவிட்டு மிதித்ததோடு மட்டுமல்லாமல், மனிதாபமின்றி அப்பகுதியிலிள்ள இரும்பு தூணில் கட்டிவைத்தும் தாக்கினர். சுமார் 2 மணிநேரம் தாமதமாக வந்த திருவட்டார் காவல்துறையினர் தூணில் கட்டப்பட்டு ரத்தகாயங்களுடன் கிடந்த ராணுவ வீரரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, ராணுவவீரர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை தாக்கிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் மதுபோதையில் சாலையில் தகராறு செய்த ராணுவ வீரரை இளைஞர்கள் சிலர் தாக்கியதை கண்ட பொதுமக்கள் சிலர் தடுத்ததால், இளைஞர்கள் அந்த ராணுவ வீரரை உயிரோடு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 261

0

0