கேள்வி கேட்டால் எழுந்து போய்விடுவதா..? சட்டமே தெரியல ; திமுக மேயரை வெளுத்து வாங்கிய பாஜக பெண் கவுன்சிலர்…!!

Author: Babu Lakshmanan
30 July 2022, 1:18 pm
Quick Share

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாமன்ற கூட்டத்தில் பாஜக பெண் மாமன்ற உறுப்பினரின் கேள்விக்கு “ஈகோ காரணமாக பதில் சொல்ல முடியாமல் திமுக கட்சியை சேர்ந்த மேயர், ஆணையர் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் கூட்டத்தை பாதியிலேயே முடித்த கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. திமுக கட்சியை சேர்ந்த பெண் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆணையர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையில் மாமன்ற உறுப்பினர்களிடையே மொத்தம் 66 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

அதிமுக கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் சிந்தன் பேசும்போது, பாக்கியலட்சுமி நகர் பகுதியில் திமுகவினர் நடத்தும் டாஸ்மாக் கடைக்கு வரியே வாங்காமல் மாநகராட்சி அலுவலர்கள் எப்படி குழாய் கனெக்சன் கொடுத்தார்கள், என கேள்வி எழுப்பினார்.

அதனைத் தொடர்ந்து, தன்னுடைய வார்டில் உள்ள குறைகளை பற்றி மேயரிடம் கூறிய பாஜக கட்சியை சேர்ந்த 46வது வார்டு மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசையப்பர், பின்னர் ஆணையரிடம் கணக்கு குழு பற்றிய விளக்கம் கேட்க, ‘நான் பணியில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகின்றது, அதனால் சரியான தகவல்கள் தற்போது அப்டேட்டில் இல்லை,’ என ஆணையர் கூறினார்.

ஆணையர் பேசிக் கொண்டிருந்தபோதே இடை மறித்த திமுக கட்சியின் பெண் மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசைப்பரிடம், “இது போன்ற கேள்விகளை இங்கே கேட்க கூடாது, தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்ளுங்கள்,” என கோபமாக கூறிவிட்டு, பாதியிலேயே கூட்டத்தை முடித்துக் கொண்டு நாற்காலியில் இருந்து விருட்டென எழுந்து சென்று விட்டார்.

கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு மேயர் எழுந்ததால் அனைத்து திமுக உறுப்பினர்களும் அவரை பின் தொடர்ந்து வெளியேறி விட்டார்கள். தங்கள் வார்டுகளில் உள்ள பிரச்சனைகளை பற்றி பேச வந்திருந்த அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்ககட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் ஏதுமறியாமல் திகைத்துப் போய் நின்றார்கள்.

ஏற்கனவே ஒரு முறை இதே போல் மேயரிடம் மாமன்ற உறுப்பினர் கேள்வி கேட்டதற்கு, அப்போதும் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு தன் அறைக்கு சென்று விட்டார். மக்களின் வரிப்பணத்தில் சொகுசாக வலம் வந்துகொண்டு, நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களில் லட்சக்கணக்கில் கமிஷன் வசூலிக்கும் மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாமன்ற பெண் உறுப்பினர்களிடம் மிகவும் ஈகோ பார்க்கின்றார் என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறினர்.

பாதியிலேயே கூட்டத்தை முடித்துக் கொண்டு மேயர் உள்ளிட்ட திமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளியேறி சென்றதால், ஆவேசம் அடைந்த மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசையப்பர், கணக்கு குழு பற்றி முழு தகவல்களை அளிக்க விடாமல் தடுத்த மேயரையும், ஆணையரையும் கண்டித்து மேயர் அறையை முற்றுகையிட்டு கோஷமிட்டதால் மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைப் பற்றி மாமன்ற உறுப்பினர் கயல்விழி சூசையப்பர் கூறும் போது, மாநகராட்சியின் ஆய்வாளராக பணி செய்யும் லட்சுமி பிரியா என்பவர் என்னுடைய வார்டில் சரியான பணிகளை செய்வதில்லை. ஏதாவது கேள்வி கேட்டால், மிகவும் திமிராக பதில் பேசுகின்றார். இந்த அளவுக்கு மாநகராட்சி ஊழியர்கள் மிகவும் மெத்தனமாக செயல்படுகிறார்கள், எனக் கூறினார்.

மேலும் கூறுகையில், மாநகராட்சியின் வரவு செலவு கணக்கு குழுவில் நான் உள்ளேன். கணக்கு குழுவின் சட்டதிட்டங்களை தகவல் அறியும் உரிமையின் கீழ் பெற்றுள்ளேன். கணக்கு குழு தொடர்பான தகவல்களை ஆணையரிடம் தான் கேட்டேன். இடை மறித்த மேயர் மகாலட்சுமி யுவராஜ் என் மீது உள்ள காய்ப்புணர்ச்சியின் உள்ள இந்த காரணமாக என்னுடைய சரியான கேள்விகளுக்கு முறையான பதில்களை அளிக்காமல் தவிர்த்து வருகின்றார். திமுக கவுன்சிலர் சந்துருவின் சொல்லை கேட்டு மேயர் ஆடிக் கொண்டு உள்ளார், என வருத்தப்பட்டார்.

மாமன்ற கூட்டத்தில் நடைபெறும் விவாதங்களை செய்தி எடுக்க சென்ற நமது மாவட்ட செய்தியாளரிடம், மேயர் எச்சரிக்கும் விதமாக வீடியோ எடுக்கக் கூடாது, புகைப்படம் தான் எடுக்க வேண்டும் எனக் கூறியது சமூக ஆர்வலர்கள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் மேயரின் அறியாமைத்தனத்தை எடுத்துரைத்தது.

மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் மத்திய , மாநில அரசு அலுவலங்கள் என எதுவாக இருந்தாலும் அதில் நடைபெறும் முறைகேடுகளையும், பணிகளையும் மக்களுக்கு எடுத்துரைப்பது மீடியாக்களின் கடமை என பல விதமான தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் பலமுறை எடுத்துரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் நான்காவது தூண் என கூறப்படும் பத்திரிக்கை மற்றும் ஊடக (மீடியாக்களின்) சுதந்திரத்தில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களின் பணிகளை தடுக்கவோ, அதில் குறுக்கிடவோ , தலையிடவோ, அனுமதி மறுக்கவோ மற்றவர்களுக்கு உரிமை இல்லை என்பதை உலகின் பல சட்ட வல்லுனர்கள் ஏற்கனவே பலமுறை எடுத்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 468

0

0