மக்களை ஏன் அலைக்கழிக்கறீங்க… கேள்வி கேட்ட அதிமுக பிரமுகரை அசிங்கமாக திட்டிய திமுக நிர்வாகி.. 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடு நடப்பதாக புகார்..!!

Author: Babu Lakshmanan
23 March 2022, 4:40 pm
Quick Share

100 நாள் வேலைதிட்ட அட்டையை புதுப்பிக்க மக்களை அலைக்கழிப்பதாக எழுந்த புகார் குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக பிரமுகரை தகாத வார்த்தைகளில் திமுக நிர்வாகி திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூர் பகுதியில் சுமார் 4500க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பேபி சசிகலா என்பவர் ஒன்றிய கவுன்சிலராக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 450க்கும் மேற்பட்டவர்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன் அடைந்து வருகிறார்கள். 

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை களக்காட்டூர் கவுன்சிலர் பேபி சசிகலா அவர்களுக்கு, அப்பகுதி மக்கள் செல்பேசியில் அழைத்து நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் புதிய கார்டு போடுவதற்காக திமுகவினர் எங்களை மிகவும் அலைக்கழிக்கின்றனர் என புகார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கவுன்சிலர் பேபி சசிகலா, தன்னுடைய கணவரும், காஞ்சிபுரம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான ராஜூவை அழைத்துக்கொண்டு திரௌபதி அம்மன் கோவில் அருகே சென்றனர்.

அங்கு திமுக கொடி கட்டிய காரில் ஏசி போட்டுக்கொண்டு திமுக கிளை கழக செயலாளர் ராஜகோபால் என்பவரின் மகனும், பணித்தள பொறுப்பாளருமான சூர்யா (23) என்பவர் காரில் உட்கார்ந்து கொண்டே அங்கு வரவழைத்த மக்களிடம் 100 நாள் வேலைக்கான ஆவணங்களை கேட்டு அலைகழித்துக்கொண்டு இருந்ததை கண்டனர்.

இதுதொடர்பாக ராஜூ, திமுக இளைஞரணி கிளை செயலாளர் சூர்யாவிடம் சென்று, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, புகைப்படம் போன்ற ஆவணங்களை மற்ற வார்டு உறுப்பினர்களை வைத்து கொண்டு, பஞ்சாயத்து அலுவலத்தில் வாங்கினால் தான் மக்கள் சிரமப்படாமல் இருப்பார்கள், என கூறினார்.

பணித்தள பொறுப்பாளர் சூர்யா இவர்களை தகாத வார்த்தையில் பேசியது மட்டுமல்லாமல், தன்னுடைய தந்தை ராஜகோபாலை நேரில் வரவழைத்தார். அங்கு வந்த திமுக கிளை கழக செயலாளர் ராஜகோபால் மிகுந்த ஆவேசத்துடன் ஒன்றிய கவுன்சிலர் பேபி சசிகலா மற்றும் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜூ ஆகியோர்களை தகாத வார்த்தைகளால் பேசி, கற்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இது எங்களுடைய ஆட்சி, என்னை எவனும் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் வைத்ததுதான் சட்டம் எனக் கூறி, நீ ஸ்டாலினிடம்  போவதென்றால் போ , எம்எல்ஏவிடம் போவதென்றால் போ, எனக்கு ஒன்றும் கவலை இல்லை, எனக் கூறியதை கேட்டு, ராஜூ உள்ளிட்ட அப்பகுதியில் கூடியிருந்த மக்கள் அதிர்ச்சியுற்றனர். சம்பவ இடத்துக்கு அதிமுக கழகத் தொண்டர்கள் வந்தவுடன் இந்த பிரச்சனை அப்போது பெரிது படுத்தப்படாமல் கைவிடப்பட்டது.

களக்காட்டூர் கவுன்சிலர் மற்றும் அதிமுக ஒன்றிய கழக செயலாளர் ராஜூ அங்கே அவர்களை தரக்குறைவாக பேசி கற்களால் தாக்க வந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜு, தன்னுடைய ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்திற்கு சென்று திமுக பிரமுகர் ராஜகோபால் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார்.

அதிமுக பிரமுகர்களை தகாத வார்த்தைகளால் பேசி கற்களால் தாக்க வந்து கொலை மிரட்டல் விடுத்த செயல் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுமட்டுமல்லாமல் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், தனியார் கம்பெனிகளில் வேலை செய்யும் 40க்கும் மேற்பட்டவர்களை போலியாக கணக்கில் வரவு வைத்து லட்சக்கணக்கில் மோசடி செய்யும் இவர்கள் மீது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்போவதாக ஒன்றிய கவுன்சிலர் பேபி சசிகலா தெரிவித்தார்.

Views: - 620

0

0