கஞ்சா போதையில் பட்டாக்கத்தியுடன் இளைஞர் அராஜகம்… சாலையில் செல்வோர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்.. காஞ்சியில் அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
17 March 2022, 6:32 pm
Quick Share

சுற்றுலா நகரம் என பெயர் பெற்ற காஞ்சிபுரம் மாநகரில் சமீபகாலமாக கஞ்சா பயன்பாடு அதிகரித்து ரவுடிகளின் அட்டகாசத்தால் பதட்டமான சூழ்நிலையுடன் காணப்பட்டு வருகிறது. 

காஞ்சிபுரத்தில் மாமல்லன் நகர் பகுதியில் மிக பிரபலமான மாமல்லன் மெட்ரிக்குலேஷன் பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியின் வாசலருகே மதியம் 2 மணி அளவில் கேடிஎஸ் மணி தெரு பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ்  என்ற அர்னால்ட் (வயது 19) என்பவன் கஞ்சா போதையில் பட்டாக் கத்தியை எடுத்துக்கொண்டு பள்ளி அருகே நின்று, அப்பகுதியில் சென்று வந்தவர்களையெல்லாம் கண்ட மேனிக்கு வெட்ட துவங்கினான். 

அப்பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த  நாகராஜன் மற்றும் சங்கர் என்ற இரண்டு நபர்களை கத்தியால் தாக்கியதில் அவர்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுபப்பட்டனர். பட்டாக்கத்தி உடன் சுற்றிய வாலிபரை கண்டு அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். காவலர்கள் விரைந்து வந்து பட்டா கத்தியுடன் பொதுமக்களை விரட்டிக் கொண்டு இருந்த புஷ்பராஜை பிடித்து, அவன் வைத்திருந்த கத்தியை பறிமுதல் செய்து தாலுக்கா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பட்டப்பகலில் பள்ளி வாசலில் கத்தியுடன் அப்பகுதியில் வந்தவர்களை மிரட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் மாணவ மாணவிகளிடையேயும் பரபரப்பையும் பதட்டத்தையும் உண்டாக்கியது.

மேலும்,  பிரபலமான  இந்த பள்ளியில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து கேமராக்களும் பழுதடைந்து உள்ளதால், பட்டா கத்தியுடன் மிரட்டிய புஷ்பராஜன் செயலை சிசிடிவி கேமரா  மூலம்   காண  முடியவில்லை.

பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புஷ்பராஜ் என்கிற அர்னால்ட் மீது தாலுகா காவல் நிலையம் விஷ்ணு காஞ்சி மற்றும் சிவகாஞ்சி காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, அடிதடி, திருட்டு என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாநகராட்சி அருகே  தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி சாம்பியன் உட்பட 3 நபர்களை 15 பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தியால் வெட்டியது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் கஞ்சா பயன்பாடும், இருபது வயது நிரம்பிய வாலிபர்கள் பட்டா கத்தியுடன் ரவுடிஸத்தில் ஈடுபடுவதும்  போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

Views: - 661

0

0