கடல் சீற்றத்தால் படகில் இருந்து தூக்கி வீசப்பட்ட மீனவர் பரிதாப பலி… சோகத்தில் மூழ்கிய மீனவ கிராமம்!!

Author: Babu Lakshmanan
26 April 2022, 6:49 pm
Quick Share

கன்னியாகுமரி: குறும்பனையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர் கடல் சீற்றத்தால் படகில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் குறும்பனை பகுதியை சேர்ந்தவர் ததேயூஷ் மகஷ். இவர் பைபர் படகில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். இன்று அதிகாலை வழக்கம் போல் யூஜின் என்பவரின் பைபர் படகில் 5 மீனவர்களாக குறும்பனை கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் கடல் சீற்றத்தால், பைபர் படகில் இருந்த ததேயூஷ் மகேஷ் கடலில் தூக்கி வீசப்பட்ட நிலையில், படகும் அவர் மீது மோதியதாக தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த மகேஷ் கடலில் மூழ்கவே சக மீனவர்கள் அவரை உடனடியாக மீட்டு கரை சேர்த்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதனையடுத்து குளச்சல் கடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 645

0

0