கரூரில் பெண் ஐடி அதிகாரியை தாக்கிய திமுக நிர்வாகிகள்… சிரித்தபடி ஒதுங்கிய காவல் ஆய்வாளர் ; வைரலாகும் வீடியோவால் சர்ச்சை..!!

Author: Babu Lakshmanan
1 June 2023, 2:28 pm
Quick Share

தி.மு.க.,வினர் தாக்கி விட்டதாக வருமான வரித்துறை பெண் அதிகாரி கதறும் நிலையில், காவல் ஆய்வாளர் சிரித்தபடியே பேசிக் கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் வீட்டில், கடந்த மாதம் 26ஆம் தேதி பெண் அதிகாரி காயத்ரி உள்ளிட்ட நான்கு வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையிட சென்றனர். அப்போது, நூற்றுக்கணக்கான திமுகவினர் திரண்டு அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளை தடுத்த வழக்கில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் இரண்டு பேர் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதிகாரிகளை தடுத்து நிறுத்திய மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட பெண் கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அப்போது, காவல்துறையினர் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. சிறிது நேரத்தில் தனிப்பிரிவு காவலர்கள் மூலம் தகவல் கிடைத்து கரூர் நகர காவல் ஆய்வாளர் விதுன்குமார் உள்ளிட்ட காவலர்கள் அப்பகுதிக்கு வந்தனர். அப்போது, தாக்குதல் குறித்து பெண் அதிகாரி காயத்ரி ஆய்வாளரிடம் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தபோது, அதை பொருட்படுத்தாமல் ஆய்வாளர் விதுன்குமார் அங்கிருந்தவர்களிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்ததாக, சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 342

0

1