‘ஒன்னே கால் வருஷமாச்சு.. ஒரு வசதியும் செய்து கொடுக்க முடியல’ ; விரக்தியில் பதவியை ராஜினாமா செய்த திமுக கவுன்சிலர்..!!

Author: Babu Lakshmanan
29 April 2023, 5:04 pm
Quick Share

கரூர், பள்ளப்பட்டி நகர் மன்ற கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து திமுக கவுன்சிலர் ராஜினாமா கடிதம் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளது. திமுக கூட்டணி 22 கவுன்சிலர்கள், சுயேட்சைகளாக 5 கவுன்சிலர்கள் உள்ளனா். பள்ளப்பட்டி நகர் மன்ற மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் முனவர் ஜான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதி கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது, திமுகவை சேர்ந்த 15வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜமால் முகமது தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளப்பட்டி நகர்மன்ற கவுன்சிலர் கூட்டத்தை படம்பிடிக்க செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் செய்தியாளரை சந்தித்த 15வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜமால் முகமது:- 15வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகின்றேன். என்னுடைய கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனது வார்டு பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர்.

ஆட்சிக்கு வந்து ஒன்னேகால் வருடம் ஆகி உள்ளது. இதுவரை எந்த குடிநீர் வசதி, சாக்கடை வசதி, பிளவர் பிளாக் வசதி எந்த ஒரு வசதியும் செய்து தரவில்லை. நகராட்சி ஆணையர், நகராட்சி தலைவர் அவர்களுக்கு சாதகமான வேலைகளை மட்டும் செய்து வருகின்றனர். ஆளுங்கட்சியில் இருக்கும் எங்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. மக்கள் பிரதிநிதியாக இருந்தும் எனது வேலையை செய்ய முடியவில்லை. இன்று பள்ளப்பட்டி ஆணையரிடம் என்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளேன், என கூறினார்.

Views: - 308

0

0