முதலமைச்சரின் வருகைக்காக சாலைகளில் அகற்றப்பட்ட வேகத்தடைகள்… விபத்து ஏற்படுவதற்குள் மீண்டும் போடுமா கரூர் மாவட்ட நிர்வாகம்..?

Author: Babu Lakshmanan
7 July 2022, 6:14 pm
Quick Share

முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு வந்த போது, அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் போடாததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கரூர் மாவட்டத்திற்கு கடந்த 2ம் தேதி அன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கரூர் வந்தார். அவர் 1ம் தேதி இரவே வந்த நிலையில், மீண்டும் 2 ம் தேதி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நாமக்கல்லுக்கு சென்றார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கரூர் மாவட்ட நீதிமன்றம், கரூர் அரசுகலைக்கல்லூரி, சுங்ககேட், திருமாநிலையூர் உள்ளிட்ட பகுதிகளில், புகளூர் பகுதிகளிலும் வேகத்தடைகள் முதல்வர் வருகைக்காக அகற்றப்பட்டது.

இந்நிலையில், அவர் வந்து சென்று 5 தினங்களுக்கு மேலாக ஆகியும், இன்னும் அந்த அகற்றப்பட்ட வேகத்தடைகள், இன்னும் தார்சாலைகளில் போடாத நிலையில், ஆங்காங்கே அதிவேகமாக வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, கரூர் அரசுகலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பேருந்துகளில் இருந்து அப்பகுதியினை கடந்து கல்லூரிக்கு செல்லும் போதும், கல்லூரியில் இருந்து பேருந்து ஏறுவதற்காக இந்த புறம் வரும் வழியில் ஏராளமான வாகனங்கள் அதிவேகமாக வருகின்றன.

இது மட்டுமில்லாமல், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றத்திற்கு செல்பவர்களும் பேருந்துகளில் பயணிப்பவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஒட்டிகள் அப்பகுதிகளில் திரும்பும் போதும், விபத்துகள் உருவாகும் விதம் கட்டுபாடற்ற வேகத்தில் வாகனங்கள் செல்வதால், ஏற்கனவே அப்பகுதியில் போடப்பட்டிருந்த வேகத்தடைகளை உடனே மீண்டும் போடுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 537

0

0