17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தல்: 48 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
Author: kavin kumar22 August 2021, 8:18 pm
கோவை: 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற 48 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு பனப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.இவர் மருதூரில் உள்ள தனியார் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பணிபுரிந்து வந்தார்.அந்த கடையின் உரிமையாளர் பிரின்ஸ் ( வயது 48 ).இந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிரின்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடத்திச்சென்றுள்ளார்.பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச்சென்று சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காரமடை காவல் துறையினர் சிறுமி மற்றும் பிரின்ஸினை தீவிரமாக தேடி வந்தனர்.
இதனையடுத்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் சிறுமியுடன் பதுங்கியிருந்த பிரின்சை கைது செய்த போலீசார் அவனையும்,சிறுமியையும் மீட்டு காரமடை காவல் நிலையத்திற்கு அழைத து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினரின் தீவிர விசாரணையில் சிறுமியை கடத்திச்சென்ற பிரின்சின் சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் கூடலூர் என்பதும், இரண்டு திருமணம் நடைபெற்றுள்ளதாகவும்,முதல் மனைவிக்கு இரு மகன்கள் உள்ளனர் என்பதும்,பின்னர் விவாகரத்து செய்துள்ளனர் என்பதும்,இரண்டாவது மனைவிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இவ்வழக்கு காரமடையிலிருந்து துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.இந்நிலையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்ற பிரின்ஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு கோவை காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
0
0