காணாமல் போன 3 சிறுவர்கள்… கண்மாய் கரையில் நின்றிருந்த சைக்கிள் ; கதறி துடித்த பெற்றோர்.. போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
13 May 2023, 2:28 pm
Quick Share

கோவில்பட்டி அருகே கண்மாயில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிவலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் மகேஷ்குமார் (11). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இவரும். இவரது தம்பி அருண்குமார் (7), அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் சுதன் (7) ஆகியோர் அங்குள்ள கண்மாய் பகுதியில் விளையாடச் சென்றனர்.

இவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடினர். இந்நிலையில் கண்மாய் கரையோரம் சைக்கிள் நிற்பதை பார்த்த சிலர், உடனடியாக ஊருக்குள் தகவல் கூறினர்.

இதையடுத்து, கிராம மக்கள் அங்கு வந்து பார்த்தபோது, கண்மாய் நீரில் மாணவர் அருண் உடல் மிதந்தது. உடனடியாக கிராமத்து இளைஞர்கள் கண்மாய் தண்ணீரில் இறங்கி தேடினர். இதில், மகேஷ் மற்றும் சுதன் ஆகியோரின் உடல்களும் மீட்கப்பட்டன. தகவல் அறிந்து அங்கு சென்ற புதூர் காவல்நிலைய போலீஸார் மூன்று மாணவர்களின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையில் கண்மாயில் நீர் வரத்து ஏற்பட்டு தண்ணீர் உள்ளது. இதில், கண்மாய் அருகே விளையாட சென்ற மாணவர்கள், குளிப்பதற்காக இறங்கிய போது மூழ்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து புதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 267

0

0