திருடிய நகைகளை மூட்டை கட்டிய கொள்ளையர்கள்.. சுவர் ஏறி குதிக்கும் போது போலீசாரிடம் சிக்கிய சம்பவம் : 2 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
23 March 2023, 9:38 pm
Quick Share

கோவில்பட்டி அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருடிய சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அம்பாள் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). இவர் நகைக் கடை நடத்தி வருகிறார். இரவு இவர் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் அதிகாலை விளாத்திகுளம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ராஜ்குமார் நகை கடைக்கு பின்புறம் உள்ள சுவர் வழியாக இரண்டு பேர் பைகளுடன் இறங்கி வந்தனர். இதைப் பார்த்த போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது வெள்ளி பொருட்களும், தங்க நகைகளும் இருந்தன.

இதையடுத்து, அவர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் விளாத்திகுளம் அருகே அரியநாயகிபுரம் காலனி தெருவை சேர்ந்த மாரிமுத்து (34), மார்த்தாண்டம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (36) என்பது தெரியவந்தது. விசாரணையில், இரண்டு நாட்களுக்கு முன்பே நகைகளை திருடுவதற்கு ஏதுவாக கதவுகளை உடைக்கும் இயந்திரங்களை கடையின் மாடியில் கொண்டு வைத்துவிட்டு வந்துள்ளனர்.

மேலும், நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு கடையின் பின்புறம் வழியாக கயிர் மூலம் மாடிக்கு சென்று அங்கே இருந்து உள்ளனர். பின்னர், அதிகாலை 2 மணிக்கு மேல் நகை கடையின் கதவுகளை இயந்திரம் மூலம் உடைத்து உள்ளே சென்று வெள்ளிப் பொருட்கள், நகைகள் மற்றும் பணத்தை திருடிக் கொண்டு வெளியே வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதில் 25 கிலோ வெள்ளி பொருட்கள், 13.6 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.12,500 ரொக்க பணம் ஆகியவை அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன. விளாத்திகுளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்து, முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்களுக்கு வேறு ஏதும் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 202

0

0