விரைவில் புதுப்பொலிவுடன் குமரி திருவள்ளுவர் சிலை : ரூ.1 கோடி செலவில் ரசாயண கலவை பூச்ச திட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2022, 4:07 pm
Tihruvalluvar Statue - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையின் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது.

இந்த சிலை கடல் உப்புக் காற்றினால் பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயன கலவை பூசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூசஅரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனாபரவல் காரணமாக பணி நடைபெறவில்லை.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தி.மு..க அரசு பதவியேற்றதும் இதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. ஒரு கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு உள்ள இந்த  பணிக்கான டெண்டர் கோரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இது குறித்து ஆய்வு செய்வதற்காக பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட குழு நேற்று கன்னியாகுமரி வந்தது. 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளர் பாரதி தேவி தலைமையில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆணையாளர் டாக்டர். சிவானந்தம், மத்திய எலக்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி டாக்டர்.சரஸ்வதி, தொல்லியல்துறை உதவி கண்காணிப்பு வேதியல் நிபுணர் புருஷோத்தம ராஜ், திட்ட பொறியாளர் பால் ஜெப ஞானதாஸ் ஆகியோர் கன்னியாகுமரி வந்தனர். 

அவர்களை சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் டேவிட் பிரபாகரன், கன்னியாகுமரி ஓட்டல் தமிழ்நாடு முதுநிலை மேலாளர் யுவராஜ், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், ஸ்ரீனிவாசன், கன்னியாகுமரி சுற்றுலா அலுவலர் சீதாராமன் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் உயர்மட்ட குழு தனிப்படகில் திருவள்ளுவர் சிலை சென்றது. 

அவர்கள் சுமார் 2 மணி நேரம் சிலையின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் ஓட்டல் தமிழ்நாடு கூட்ட அரங்கில் ஆலோசனை நடத்தினர். ரூ.1 கோடி திட்ட மதிப்பில் நடைபெற உள்ள ரசாயன பூசும் பணிக்காக டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கி 3 மாதங்களுக்குள் பணி முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Views: - 889

0

0