வியாபாரமும் இல்ல.. வாழ்வாதாரமும் இல்ல.. வட்டிக்கு பணம் வாங்கிதான் வாடகை கட்டறோம் : குமரியில் வியாபாரிகள் குமுறல்!!
Author: Udayachandran RadhaKrishnan16 August 2021, 3:54 pm
கன்னியாகுமரி : வட்டிக்கு பணம் வாங்கி வாடகை கட்டணம் செலுத்தி வருகிறோம் என்றும் சுற்றுலா பயணிகளை தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது நடைமுறை படுத்திவருகிறது.
அதே போல் சுற்றுலா தலங்களும் முற்றிலும் மூடப்பட்டது . சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் இங்குள்ள வியாபாரிகள் வியாபாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கன்னியாகுமரியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கன்னியாகுமரி துணை கண்காணிப்பாளர் ராஜாவை நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினார் . தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு குவிந்தனர்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது ; கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .அதே போல் சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பயணிகள் வர தடை விதித்துள்ளது .
பயணிகள் வருகை இல்லாததால் கன்னியாகுமரி சுற்றுலா தொழிலை நம்பி உள்ள சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த இரண்டு வருடமாக வறுமையில் வாடி வருகின்றோம் .
இங்கு பணியாற்றும் பணியாளர்களின் குடும்பத்தினர் வறுமையின் உச்சத்தில் உள்ளனர். தற்போது கன்னியாகுமரிக்கு வரும் ஒரு சில சுற்றுலாப் பயணிகளையும் இங்குள்ள போலீசார் விரட்டி அடிக்கின்றனர்.
இதனால் நாங்கள் கடும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளோம் . தேவசம் போர்டு மற்றும் பேரூராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வாடகை கட்டணத்தை கூட வட்டிக்கு வாங்கி கொடுத்து வருகிறோம் .
இதனால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை விரட்டி அடிக்காமல் இருந்தாலே போதுமானதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0
0