கட்டிட தொழிலாளி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தவருக்கு ஆயுள் : நீதிமன்றம் தீர்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2022, 8:52 pm
Cbe Hudgement - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் கட்டிட தொழிலாளி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை நீலிகோணம்பாளையம் அருகில் வசிப்பவர் சக்திவேல் (வயது 27). இவர் காங்கிரிட் வேலை செய்து வருகிறார். கோவை சிங்காநல்லூர் பகுதியில் வசிக்க கூடியவர் சுப்பன் (வயது 30). இவரும் அதே வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் காங்கிரீட் வேலை முடிந்து கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி மாலை சிங்காநல்லூர் மதுபான கூடத்திற்கு சுப்பன் மற்றும் சக்திவேல் மது அருந்தச் சென்றனர்.

மது போதையில் சுப்பன், சக்திவேல் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சக்திவேல் மதுபான கூட வாசலில் கிடந்த அம்மிக்கல்லை சுப்பன் தலையில் போட்டு கொலை செய்தார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதைத்தொடர்ந்து கோவை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி எஸ். நாகராஜன் தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட சக்திவேல் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் ஆயுள் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Views: - 523

0

0