கேரளாவை போல குமரியிலும் படகு விபத்து ஏற்பட வாய்ப்பு… தமிழக அரசுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் பாஜக!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2023, 1:58 pm
DMK Vs Bjp - Updatenews360
Quick Share

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு நாராயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், நேற்று படகு கவிழ்ந்து இதுவரை 23 பேர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது.

போதிய உயிர் காக்கும் கவசங்கள் அணியாமல் சென்றதும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலானவர்களை படகில் ஏற்றி சென்றதுமே விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில், கன்னியாகுமரிக்கு சென்றிருந்தேன். விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகில் செல்ல நேர்ந்தது. அந்த படகில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் பயணிகள் இருந்ததும், பயணம் செய்தவர்களில் பலர் உயிர் காக்கும் கவசத்தை (காப்புச்சட்டை) அணியாமல் இருந்ததும் அதிர்ச்சியளிக்கிறது.

அதே போன்று விவேகானந்தர் பாறையில் அதன் முக்கியத்துவம் குறித்து பல இடங்களில் குறிப்பு உள்ளதோடு, சுற்றுலா பயணிகளுக்கு பல விவரங்களை எடுத்துரைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

மேலும், விவேகானந்தர் குறித்த ஏழு புத்தக நிலையங்களை அமைக்கப்பட்டு, பல நூல்கள் விற்பனையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், திருவள்ளுவர் சிலைக்கு சென்றிருந்த போது ஏமாற்றமே மிஞ்சுகிறது. பல ஆயிரக்கணக்கான பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வருகின்ற இடத்தில் திருவள்ளுவர் புகழை எடுத்து சொல்ல யாரும் இல்லை என்பது வேதனை.

அதே போல் திருக்குறளை, திருக்குறளின் பெருமையை பல்வேறு மொழிகளில் அங்கு வரும் பயணிகளுக்கு கொடுக்க வேண்டாமா? அவரின் கருத்துக்களை மக்களிடையே எடுத்து செல்ல எந்த வித எண்ணமோ, முயற்சியோ தமிழக அரசால் எடுக்கப்படவில்லை என்பது ஏமாற்றமே.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இதற்கு பொறுப்பு என்று சொல்லப்படுகிறது. ஆனால், அங்கே பணியாற்றுபவர்களின் அலட்சியம் முகம் சுளிக்க வைக்கிறது. அவர்களின் கடுமை அதிர்ச்சியளிக்கிறது.

உடன் தமிழக அரசு கன்னியாகுமரியில் கடலில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து கவனத்தில் கொள்ள வேண்டிய அதே நேரத்தில், பிரம்மாண்டமான திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ள இடத்தில் திருவள்ளுவரின் புகழை உலக மக்களுக்கு எடுத்து சொல்ல ஆவன செய்ய வேண்டும்.

சுற்றுலா வளர்ச்சி கழகத்திடமிருந்து நிர்வாகத்தை அகற்றி, கல்வி துறை அல்லது தமிழ் வளர்ச்சி துறையிடம் திருவள்ளுவர் சிலை நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும். வரும் முன் காப்போம்!பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு மற்றும் கடமை என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Views: - 267

0

0