தாம்பூலப் பையுடன் குவாட்டர் பாட்டில்… பிரபலமாக நினைத்த நடிகர் கார்த்தி ரசிகர் மன்ற தலைவர்.. வைரலான வீடியோவால் நேர்ந்த கதி… !!!

Author: Babu Lakshmanan
2 June 2023, 7:47 pm
Quick Share

அக்கா மகள் திருமணத்திற்கு தாம்பூலப் பையுடன் குவாட்டர் பாட்டிலை கொடுத்த தாய் மாமனான நடிகர் கார்த்தி ரசிகர் மன்ற புதுச்சேரி மாநில தலைவருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

புதுச்சேரியை சேர்ந்தவர் ராஜகுமார். புதுவை மாநில நடிகர் கார்த்தி ரசிகர் மன்ற தலைவராக இருந்து வருகிறார். இவர் அவ்வப்போது கார்த்தி பிறந்தநாள் மற்றும் அவருடைய படங்கள் வெளியாகும் போது, பல்வேறு நலத்திட்ட உதவிகள் அன்னதானங்களை வழங்கி வருகிறார். புதுச்சேரியில் கடந்த 28ஆம் தேதி இவருடைய அக்கா மகளுக்கு நகர பகுதியில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தாம்பூலம் கொடுக்கும் போது, அதோடு சேர்ந்து குவாட்டர் பாட்டில் சரக்கு கொடுத்து புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தினர். மேலும், இந்த செய்தி அனைத்து தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களில் வெளியாகி புதுச்சேரி முழுவதும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இது குறித்து விசாரணை செய்த புதுச்சேரி கலால்துறை அதிகாரிகள், பொது இடத்தில் அளவுக்கு அதிகமாக மதுபாட்டில் வைத்து பொது மக்களுக்கு விநியோகம் செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், திருமண மண்டப உரிமையாளர் மற்றும் மொத்தமாக மதுபானம் கொடுத்த மது கடை விற்பனையாளர், இதனை திருமண மண்டபத்தில் விநியோகம் செய்த நடிகர் கார்த்திக் மன்ற தலைவர் ராஜகுமாரன், ஆகிய மூன்று பேருக்கும் சேர்த்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

தான் பிரபலம் ஆக வேண்டும் என்று கருதி பெண்ணின் தாய் மாமன் செய்த இந்த செயல் அவருக்கே வினையாக வந்து முடிந்துள்ளது. மேலும், ராஜகுமார் புதுச்சேரி மாநில நடிகர் கார்த்தி தலைமை ரசிகர் மன்ற மாநில தலைவராக இருந்து வருவதால் அவருடைய ரசிகர்கள் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Views: - 1066

0

0