கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் : கொரோனா வழிகாட்டு முறையுடன் தொடங்கியது!!
Author: Udayachandran RadhaKrishnan4 October 2021, 10:03 am
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
இதனையடுத்து, தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு முதல் பயிலும் மாணவர்களுக்கும், முதுகலை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கியது.
மேலும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளது. மாணவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என கல்லூரிகள் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
0
0