காதை பிளந்த ஹாரன் சத்தம்… லாரி ஓட்டுநருக்கு போக்குவரத்து எஸ்.ஐ கொடுத்த நூதன தண்டனை ; வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
17 December 2022, 8:25 pm
Quick Share

ஏர் ஹாரனை பயன்படுத்தியதற்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வழங்கிய நூதன தண்டனை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கனரக வாகனங்கள் லாரி கார் இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் ஏர் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது என ஏற்கனவே போக்குவரத்து விதி அமலில் இருக்கும் நிலையிலும், பல வாகனங்கள் ஏர் ஹாரனை பயன்படுத்தி ஒலி எழுப்புவதன் காரணமாக, மாணவர்களும், வயதானவர்களும், நோயாளிகளும் பாதிக்கப்படக்கூடிய சூழல் இருக்கிறது.

குறிப்பாக, அரசு மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் போன்றவற்றின் முன்பு அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது என்பது விதி. இருப்பினும் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏர் ஹாரன்களை பயன்படுத்தி அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், திருவாரூரில் உள்ள நாகை புறவழிச்சாலையில் திருவாரூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராஜ்மோகன் மற்றும் காவலர் மணிமாறன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேலத்தில் இருந்து நாகப்பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்த லாரியை ஒட்டி வந்த அஜித் என்பவர் ஏர்ஹாரனில் ஒலி எழுப்பிய படி வந்துள்ளார்.

இதனைக் கவனித்த உதவி காவல் ஆய்வாளர் அந்த லாரியை மறித்துள்ளார். அப்போது, லாரியை நிறுத்தாமல் அஜித் ஓட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து, போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் ராஜ்மோகன் மற்றும் மணிமாறன் ஆகியோர் தங்களது இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று அந்த லாரியை வழிமறித்து நிறுத்தினர்.

அதன் பிறகு, அதிக ஒலி எழுப்பிய அந்த ஏர்ஹாரனை ஓட்டுனர் அஜித் மூலம் கழற்றச் செய்து அதனை அந்த லாரி டயரின் அடியிலேயே வைத்து லாரியை அதன் மீது ஏற்றச் செய்து சுக்கு நூறாக உடைக்க செய்து நூதன தண்டனை வழங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Views: - 569

2

0