காதல் திருமணம் செய்ததால் பஞ்சாயத்து விதித்த தண்டனை.. அரை நிர்வாணத்துடன் காலில் விழவைத்து கொடூரம் ; இளம்ஜோடி கண்ணீர்..!!

Author: Babu Lakshmanan
3 March 2023, 7:20 pm
Quick Share

தஞ்சை : காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகளை சமுதாய கட்டுப்பாடு என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததுடன், அரை நிர்வாணத்துடன் காலில் விழவைத்து தண்டனை வழங்கிய கொடூரம் அரங்கேறியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பொட்டலங்குடிகாடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த சுமன் (28) என்பவர், அதே சமூகத்தை சேர்ந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயா என்ற பெண்ணை மூன்று ஆண்டுகளாக காதலித்து, இரு வீட்டாரின் சமூகத்துடன் கடந்த 16ஆம் தேதி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தங்களுடைய சமூகத்தின் கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் செய்ததால், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகவும், பாதிக்கப்பட்ட தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- நாங்கள் இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 16ஆம் தேதி திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் சமூகத்தின் கட்டுப்பாட்டை மீறி காதல் திருமணம் செய்ததால், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறுகின்றனர். மேலும் எங்கள் திருமணத்தில் பங்கேற்ற தங்களுடைய உறவினர் மற்றும் நண்பர்களை ஊரை விட்டு ஒதுக்கி விட்டதாகவும், ஊரில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் அபராத தொகை கட்ட வேண்டும் எனக் கூறுகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், சமூக தலைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கட்டாயப்படுத்தியதால், திருமணத்தில் பங்கேற்றவர்கள் அபராதம் கட்டி, தலைவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி தங்களை சாணி கரைத்து சுத்தப்படுத்த வேண்டும். ஊரில் எந்த நிகழ்விலும் பங்கேற்க கூடாது. கட்டுப்பாட்டை மீறி திருமணம் செய்ததால் பல லட்சம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என அவர்கள் மிரட்டதாகவும் கூறுகின்றனர். எனவே ஊரை விட்டு ஒதுக்கிய அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து புகார் மனுவில் தெரிவித்துள்ள தலைவர் கணேசன் அவர்களிடம் கேட்டபோது, இதுபோன்று நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும், அவர்கள் நடத்தை மற்றும் பேச்சு பிடிக்காததால் தாங்கள் அவர்களை விட்டு விலகி விட்டதாகவும் கூறினார். மேலும், காலில் விழும்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும், அபராதம் யாரையும் கட்ட சொல்லவில்லை எனக் கூறிய அவர், வயதில் மூத்தவன் என்பதால் தன்னிடம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதேனும் புகார்கள் தெரிவிப்பார்கள் என்றும், அவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பதாகவும் தெரிவித்தார்.

Views: - 440

0

0