அண்ணனின் அதிவேகம்… தம்பியின் உயிரை பறித்த சோகம்… அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!!

Author: Babu Lakshmanan
23 March 2022, 1:41 pm
Quick Share

மதுரை திருப்பரங்குன்றத்தில் வீட்டிற்கு சென்ற சகோதரர்கள் வாகனம் விபத்துக்குள்ளானதில், அண்ணன் கண் முன்னே தம்பி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருமங்கலம் அருகே குராயூரைச் சேர்ந்த பூமிநாதன் – மாரி தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் கார்த்திக் (23), விக்னேஸ்வரன் (20) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கார்த்திக் மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து முடித்துவிட்டு அரசுப்பணியில் சேர்வதற்காக தற்போது தயாராகி வருகிறார். இளைய மகன் விக்னேஷ்வரன் தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.

இன்று கார்த்திக் தனது உறவினர் ஒருவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்., அவரை பார்ப்பதற்காக தனது நண்பரிடம் இருசக்கர வாகனத்தை கடன் வாங்கிவிட்டு உறவினரை மருத்துமனையில் சென்று பார்த்துவிட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, கல்லூரியில் படிக்கும் தனது தம்பி விக்னேஸ்வரனையும் தம்முடன் வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று இருசக்கர வாகனத்தில் தம்பியை அழைத்துக்கொண்டு திருப்பரங்குன்றம் வழியாக திருமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மூலக்கரை அருகே வந்தபோது செந்தாமரை பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதற்காக விளாச்சேரியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தனது ஸ்கூட்டியை திருப்ப முற்பட்டார். அப்போது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சகோதரர்கள் வாகனமும், பெட்ரோல் நிரப்புவதற்காக சென்ற இருசக்கர வாகனம் நேர் எதிரே மோதியதில், நிலை தடுமாறி கீழே விழுந்த சகோதரர்கள், எதிரே வந்த டாட்டா ஏஸ் வாகனத்தில் முன்பு விழுந்தனர்.

இதில் விக்னேஸ்வரன் என்ற இளைஞர் தலையின் மீது வாகனம் மோதியதில் விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த கார்த்தி உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மதுரை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த விபத்து அருகில் இருந்த கடை ஒன்றில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்போது சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில்., இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சகோதரர்கள் எதிர்பாராத விதமாக வாகனம் விபத்துக்குள்ளாகி அண்ணன் கண்முன்னே தம்பி படுகாயமடைந்து பலியான சோகம் மதுரையில் அரங்கேறியுள்ளது.

Views: - 829

0

0