இறந்த மனைவிக்கு சிலை வடித்த கணவன்! ஓர் நெகிழ்ச்சி சம்பவம்!!
11 September 2020, 10:34 amமதுரை : இறந்த மனைவியின் 30ம் நாளை முன்னிட்டு தத்ரூபமாக சிலை அமைத்து மதுரையில் தொழிலதிபர் வழிபட்டு வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் சேதுராமன், பிரபல தொழிலதிபரான இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆகஸ்டு 8ஆம் தேதி உடல்நலம் குன்றி இயற்கை எய்தினார். சாதாரண தொழிலாளியாக இருந்த நிலையில் சேதுராமன் பிச்சைமணியை மணந்த பின் அவர் அளித்த ஊக்கம் காரணமாக தான் தொழிலதிபராக உருவாகி மகிழ்ச்சியுடன் இருந்ததால் மனைவி இறந்தாலும் கூட தன்னுடன் அவரின் நினைவுகள் இருக்கவேண்டும் என எண்ணியுள்ளார்.
இதனையடுத்து மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பியான பிரசன்னா மற்றும் ஓவியர் மதுரை மருது ஆகியோரை கொண்டு பைபர் மெட்ரியல் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன், என்றும் நிரந்தரமாக இருக்கும் வகையில் 6அடி உயரம் கொண்ட தனது மனைவியை தத்ரூபமாக சிலையாக உருவாக்க வைத்து அதனை தனது வீட்டில் வைத்து வணங்கிவருகிறார்.
இதேபோல் வீட்டில் நுழையும போதே மனைவியை நினைவுபடுத்தும் வகையில் மனைவி உருவம் பொறித்த ஓவியத்தை வரையவைத்துள்ளார் சேதுராமன். பிச்சைமணி அம்மாள் இறந்து 30 ஆம் நாளையொட்டி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட மனைவியின் சிலையை வைத்து வழிபாடு செய்தார்.
இன்றைய இளையசமூகத்தினர் கணவன் – மனைவியின் புனித உறவு குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கிலும், தான் உயிருடன் இருக்கும் வரை தனது மனைவி என்னுடனே இருப்பார் எனவும் , சிலையை பார்க்கும்போதெல்லாம் தனது மனைவி தன்னுடனே இருப்பதாகவும் மனம் நெகிழ தெரிவிக்கிறார் சேதுராமன்.
0
0